"இதை" செய்தால் அவர்களுக்கும் நல்லது.. எங்களுக்கும் நல்லது! அதிமுக விவகாரத்தில் விபி.துரைசாமி நறுக்
சென்னை: அதிமுகவில் இப்போது ஒற்றை தலைமை என்ற முழக்கம் எழுந்துள்ள நிலையில், தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.
அதிமுகவில் திடீரென இப்போது ஒற்றை தலைமை என்ற முழக்கம் எழுந்துள்ளது. இது குறித்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோருக்கு இடையே மோதல் எழுந்துள்ளது.
இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாலேயே முக்கியத்துவம் இல்லையென்றாலும் துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்து இருந்தார்.

வி.பி.துரைசாமி
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக ஏற்கனவே விமர்சனங்கள் இருந்த நிலையில் ஓபிஎஸ் கருத்து அதை ஒப்புக் கொள்ளும் விதமாக அமைந்துவிட்டது. இது தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே பாஜக தலைவர்கள் இதற்கு விளக்கம் அளித்து வருகின்றனர். இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி பல்வேறு விவகாரங்கள் குறித்து விளக்கி உள்ளார்.

ஊழல் புகார்கள்
வி.பி.துரைசாமி பேசுகையில், "தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சுப்பிரமணியன், நாசர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் சொல்லி வருகிறார். இதுவரை எந்தவொரு குற்றச்சாட்டையும் முதல்வர் மறுக்கவில்லை. இதன் மூலம் அண்ணாமலை கூறிய ஊழல் புகார்கள் உண்மை என்பது தெளிவாகத் தெரிகிறது. இது பொய்யென்றால் திமுக நீதிமன்றத்திற்குப் போகட்டும். நாங்கள் அங்கே எங்களை நிரூபிக்கிறோம்.

ராகுல் காந்தி
டெல்லியில் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை விசாரணை நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் மக்களைத் தூண்டி விட்டு, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் கே.எஸ்.அழகிரி ஆளுநரை சந்தித்து மனு கொடுக்கப் போவதாகக் கூறுகிறார். ஊழல் குற்றச்சாட்டு என்பது தனிப்பட்ட நபரின் பிரச்சினை. இதை அவர்கள் நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டும்.

மக்கள் பிரச்சினை இல்லை
இதற்காகப் போராட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயம். போராட்டம் என்பது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்காக இருக்க வேண்டும். ஆனால், இங்கே மக்கள் பிரச்சினை எதுவும் இல்லை. தனிப்பட்ட நபர்கள் மீது தான் குற்றச்சாட்டுகள் உள்ளன. காங்கிரசார் போராட்டம் நடத்துவது சட்டத்திற்கு, நீதிக்கு, தர்மத்திற்கு எதிரானது. மக்களுக்கும் எதிரானது.!

எல்லாருக்கும் நல்லது
அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றை தலைமை கோஷம் என்பது உட்கட்சி விவகாரம். இந்த விவகாரத்தில் அவர்கள் தான் பொதுக்குழுவைக் கூட்டி முடிவு எடுக்க வேண்டும். உட்கட்சி விவகாரத்தில் பாஜகவிற்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லை. இந்த விவகாரத்தில் கருத்துச் சொல்லக் கூட விரும்பவில்லை. உட்கட்சி விவகாரம் என்பதால் முழுக்க முழுக்க அவர்களே பேசி முடிவு எடுக்க வேண்டும். இது தான் அவர்களுக்கும் நல்லது, எங்களுக்கும் நல்லது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications