மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசு நடத்த வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்புடன் மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் சமூக நீதி காவலரான முன்னாள் பிரதமர் விபி சிங் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் விபி சிங் குடும்பத்தினர், உ.பி. எதிர்க்கட்சித் தலைவரான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உத்தப்பிரதேசத்தில் விபி சிங் பிறந்ததால் அவரது தாய் வீடு அந்த மாநிலம். ஆனால் விபி சிங்கின் தந்தை வீடு தமிழ்நாடுதான். தந்தை பெரியாரை பெரிதும் மதித்தவர் விபி சிங். மண்டல் கமிஷன் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் போது நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயரை உச்சரித்தவர் விபி சிங்.
தமிழ்நாட்டின் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைத்தவர் விபி சிங். ஈழத் தமிழர் பிரச்சனைக்கான தமது வீட்டில் 9 மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அந்த கூட்டத்தில் அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் கருத்தே தமது நிலைப்பாடு என சொன்னவர் விபி சிங். மாநிலங்களிடையேயான கவுன்சிலை உருவாக்கியவர். தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெறுவது வழக்கம். இதனை மாநிலங்களில் நடத்த அதுவும் சென்னையில் நடத்த காரணமாக இருந்தவர் முன்னாள் பிரதமர் விபி சிங்.
இத்தனைக்கும் விபி சிங் பிறப்பால் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல. பொருளாதாரத்தில் ஏழையும் அல்ல. விபி சிங் பிரதமராக இருந்த போதுதான் மத்திய அரசு பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரை நிறைவேற்றப்பட்டது. தேர்தல் சீர்திருத்தங்கள், தகவல் அறியும் உரிமை சட்டம், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் ஆகியவற்றுக்கு வித்திட்டவர் மறைந்த முன்னாள் பிரதமர் விபி சிங்.
சென்னை விமான நிலையத்தில் பேரறிஞர் அண்ணா, காமராஜர் பெயரை வைக்க வேண்டும் என சென்னை கூட்டத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி கோரிக்கை வைத்தார். அதே கூட்டத்தில் அந்த கோரிக்கையை ஏற்று அண்ணா, காமராஜர் பெயரை வைத்தவர் விபி சிங். தம்முடைய கோரிக்கைகளுக்காக டெல்லிக்கு வராமல் சென்னையிலேயே இருந்து சொல்லுங்கல் என கருணாநிதியிடம் சொன்னவர் விபி சிங். நாட்டின் பிரதமராக விபி சிங் பதவி வகித்த காலம் வசந்த காலம். அப்படியான ஒரு காலத்தை நமது ஒற்றுமையால் உருவாக்க வேண்டும்.
நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடங்கி அனைத்து துறைகளிலும் இடஒதுக்கீடு அவசியம் கொண்டுவரப்பட வேண்டும். விபி சிங் சிலை திறப்பு விழாவில் சில முக்கியமான தீர்மானங்களை நாம் எடுக்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துகிற மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்த வேண்டும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை கண்காணிக்க அனைத்து கட்சி எம்பிக்கள் குழு அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம். விபி சிங் ஏற்றி வைத்த சமூக நீதி தீபம் ஒருபோதும் அணையாது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications