எழுதி வச்சுக்கோங்க வரும் தேர்தலில் அதிமுக ஜெயிக்காது! தவெகவில் இணைந்த மாஜி எம்எல்ஏ விமர்சனம்
சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறவே பெறாது என தவெகவில் இணைந்த வி.எஸ்.பாபு தெரிவித்துள்ளார். இவர் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திமுகவில் இருந்து அதிமுகவுக்கு சென்று பின்னர் தவெகவில் இணைந்தார்.
புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் வி.எஸ்.பாபு. இவர் வடசென்னை பகுதியைச் சேர்ந்தவர். திமுகவில் இருந்த இவர் சென்னை புரசைவாக்கம் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

இவர் திமுகவில் மாவட்ட அளவில் முக்கிய பொறுப்புகளையும் வகித்திருந்தார். 2011 ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக போட்டியிட்ட போது அவரது வெற்றிக்காக வி.எஸ்.பாபு கடுமையாக உழைத்தார். அதிமுக சார்பில் சைதை துரைசாமி கடும் போட்டியாளராக இருந்த போதிலும் ஸ்டாலினின் வெற்றிக்கு பாபு உதவினார்.
2011 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிமுகவில் இருந்து சேகர்பாபு, திமுகவுக்கு வந்தார். அப்போது பாபுவுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என கூறி அதிமுகவில் இணைந்தார். அங்கு அவர் வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்டச் செயலாளர் பொறுப்பில் புரசை வி.எஸ்.பாபுவை நியமித்தார்.
இந்த நிலையில் அங்கும் தனக்கான முக்கியத்துவம் கிடைக்கவில்லை என கருதிய வி.எஸ்.பாபு அங்கிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தவெகவில் விருப்பமனு வழங்கி வரும் நிலையில் அங்கு சென்ற பாபு பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுமைத் திறன் இல்லை. அதிமுகவில் விருப்பமனு வாங்கினேன். பிறகு அவர்களின் செயல்பாடுகள் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் விலகிவிட்டேன். வரும் தேர்தலில் அதிமுக நிச்சயமாக வெற்றி பெறாது என தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையனை தொடர்ந்து அதிமுகவில் இருந்து ஜேடிசி பிரபாகரன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்துவிட்டனர். தேர்தலுக்குள் நிறைய மாஜி அமைச்சர்கள் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் அவ்வப்போது கூறி வருகிறார்.












Click it and Unblock the Notifications