டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்! ஊதிய உயர்வை அறிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி! எவ்வளவு கூடும்?
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பினை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு சட்டசபையில் அறிவித்தார். டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 2000 ஊதிய உயர்வான இந்த மாதம் (ஏப்ரல்) 1 ஆம் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் செந்தில் பாலாஜி கூறினார். மேலும் 50,000 விவசாய மின் இணைப்புகள் இந்த ஆண்டு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடந்து வருகிறது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்தார். டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். இது தொடர்பாக செந்தில் பாலாஜி கூறியதாவது:-

ரூ.2,000 சம்பளம் உயர்வு
தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குதல் தொடர்பாக, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள், ஆக மொத்தம் 23,629 மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள்.
தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் மேற்பார்வையாளர்களுக்கு ரூபாய் 2000, விற்பனையாளர்களுக்கு ரூபாய் 2000, மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூபாய் 2000, 01.04.2025 முதல் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூபாய் 64.08 கோடி கூடுதல் செலவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
டாஸ்மாக் நிறுவனம்
டாஸ்மாக் நிறுவனம் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் மூலமாக தமிழகத்தில் மது விற்பனை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கடைகள் வழியாக மதுபானம் சில்லறை விற்பனை நடைபெறுகிறது. இந்த டாஸ்மாக் கடைகளில் பல ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு தொகுப்பூதிய முறையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
தங்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ந்து முன்வைத்து இருந்தனர். இத்தகைய சூழலில்தான் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வினை தமிழக அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான ஊதிய உயர்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
ரூ. 48,344 கோடியாக உயர்வு
முன்னதாக இன்று சட்டசபையில், தமிழகத்தில் 2024 - 25 ஆம் ஆண்டு நிதியாண்டில் மது விற்பனை மூலம் ஆயத்தீர்வை மற்றும் மதிப்பு கூட்டு வரி மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம், வெளியிடப்பட்டது. அதன்படி, அதன்படி கடந்த 2021 - 22 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.36,500 கோடி வருவாய் கிடைத்தது. 2022 - 23 ஆம் ஆண்டில் இது ரூ.44,121 கோடி வருமானம் வந்தது. இது 22.38% அதிகம் ஆகும். 2023 - 24 ஆம் நிதி ஆண்டில் ரூ.45, 855 கோடி வருமானம் வந்தது. இது முந்தைய ஆண்டினை விட 3.93% தான் அதிகம்.
அதே போல் 2024 - 25 ஆம் ஆண்டில் அரசுக்கு ரூ. 48,344 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 5.5 சதவீதம் அதிகம் ஆகும். ஒட்டு மொத்தமாக திமுக. ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.36,050 கோடியாக இருந்த மது வருமானம், இப்போது ரூ.48,344 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 34 சதவீத வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications