இந்த குரலுக்காகக் காத்திருக்கிறேன்.. நன்றி சொல்ல வந்த ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் கமல்ஹாசன் சொன்ன விஷயம்!
மநீம தலைவர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் நன்றி தெரிவித்த நிலையில், நீண்ட காலத்திற்குப் பிறகு சட்டசபையில் ஒலிக்க இருக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குரலுக்காக காத்திருக்கிறேன் என அவரை வாழ்த்தியுள்ளார் கமல்ஹாசன்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் அவர் நேற்று எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக்கொண்டார். வரும் 20-ஆம் தேதி சட்டப்பேரவையில் நடக்கும் பட்ஜெட் கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்க இருக்கிறார்.

இதற்கிடையே, இடைத்தேர்தலில் தன்னை ஆதரித்து பிரச்சாரம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார் இளங்கோவன். இடைத்தேர்தலில் தன்னை ஆதரித்து வாக்கு சேகரித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து அவருடன் பேசினார் ஈவிகேஎஸ் இளங்கோவன். தனக்கு ஆதரவு அளித்ததற்காக கமல்ஹாசனுக்கு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றிருந்தது மக்கள் நீதி மய்யம். இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்த கமல்ஹாசன், அவருக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார். இந்நிலையில், எம்.எல்.ஏவாக பதவியேற்றதும் கமல்ஹாசனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் இளங்கோவன்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக கமல்ஹாசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான செல்வப்பெருந்தகை ஆகியோர் என்னைச் சந்தித்து பேசினர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எனது பிரசாரத்திற்காக அவர்கள் நன்றி தெரிவித்தனர். நீண்ட காலத்திற்குப் பிறகு சட்டசபையில் ஒலிக்க இருக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குரலுக்காக காத்திருக்கிறேன் என அவரை வாழ்த்தினேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications