வார் ரூம் vs வார் ரூம்.. வேலைகளை தீவிரப்படுத்திய ஸ்டாலின்.. இங்கே பார்த்தால் விஜய்.. ஆட்டம் சூடாகுது
சென்னை: 2026 சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகள் தொடங்கி உள்ளன. தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஆளும் திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மற்றும் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகிய மூன்று முக்கிய கட்சிகளும் தொடங்கிவிட்டன.
முக்கியமாக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்களை செய்வதற்காக கட்சிகள் வார் ரூம்களை தீவிரப்படுத்த தொடங்கி உள்ளன. திமுகவின் மு.க. ஸ்டாலின், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, மற்றும் தவெகவின் விஜய் ஆகியோர் ஒரே நேரத்தில் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

விஜய் திட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் மிகப்பெரிய ஐடி விங் அலுவலகத்தை திறக்க உள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் மிகப்பெரிய அளவில் ஐடி விங்கிற்காக அலுவலகம் திறக்கப்பட உள்ளது.
இதில் விஜய் முதல்வராக போகும் தேதி என்று குறிப்பிட்டு உத்தேச கவுண்டிங் ஓடிக்கொண்டு இருக்கிறது. tvk_cardiffsaravanan என்ற இன்ஸ்டாகிராம் ஐடி இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி இருக்கும் நடிகர் விஜய், மிகப்பெரிய ஐடி விங் அலுவலகத்தைத் திறந்துள்ளார். இதற்காகச் சென்னை தேனாம்பேட்டையில் பிரம்மாண்டமான அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
நடைபயணம் மற்றும் தேர்தல் பணிகளைக் கவனிக்கும் விதமாக மிகப்பெரிய ஐடி விங் அலுவலகத்தைத் திறக்க விஜய் முடிவு செய்துள்ளார். தேனாம்பேட்டையில் அலுவலகம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே அலங்காரப் பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் மாநாடு நடத்தவும், செப்டம்பர் முதல் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விக்கிரவாண்டி மாநாட்டைப் போல் பிரம்மாண்டமாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ளும் வகையில் மாநாடு நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் செப்டம்பர் மாதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதனை தஞ்சாவூரில் இருந்து தொடங்க இருப்பது உறுதியாகியுள்ளது. டெல்டா பகுதியில் இளைஞர்கள் மற்றும் மகளிர் மத்தியில் தவெகவுக்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பதால், விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கான தொடக்கமாகவும் இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், செப்டம்பர் மாதம் பெரியாரின் பிறந்தநாளான 17ஆம் தேதியன்று விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெகவின் கொள்கைத் தலைவர்களில் பெரியாரும் ஒருவர். இதனால் கொள்கைத் தலைவரின் பிறந்தநாளன்று சுற்றுப்பயணத்தை தொடங்க விஜய் முடிவெடுத்துள்ளார்.
திமுகவின் தேர்தல் பணி
திமுக 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற தலைப்பில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதற்கான வார் ரூம் அமைக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த வார் ரூமை நேற்று பார்வையிட்டார். இதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் முதல் 45 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க உள்ளனர். கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் மக்களைச் சந்தித்து பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.
முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், "திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல; இது தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க எல்லோரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி. 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் இணைந்தவர்களில் விருப்பம் உள்ளவர்கள் திமுகவில் உறுப்பினர்களாகவும் இணைவார்கள். சாதி, மதம், கட்சி சார்பு என எதையும் பார்க்காமல் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் நாம் சென்றடைய வேண்டும். ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி, 45 நாட்கள் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு நடைபெறும்! களத்தில் செயல்படும் நாம் நான்கு படிநிலைகளில் செயல்பட வேண்டும்" என்று கூறினார்.
எடப்பாடியின் சுற்றுப்பயணம்
அதிமுக தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள முழுமையாக தயாராகிவிட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். 234 தொகுதிகளுக்கும் செல்லும் இந்த சுற்றுப்பயணம் "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பத்திர காளியம்மன் கோவிலில் பூஜையுடன் தொடங்கி உள்ளார். மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டி வன பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு, தனது சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொள்ள இருக்கிறார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு, தமிழக அரசியல் கட்சிகள் சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு கட்சியும் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.












Click it and Unblock the Notifications