ஸ்டாலின் அன்று கொடுத்த புகார் தான் செந்தில் பாலாஜி கைதுக்கு காரணம்? எஸ்.எஸ்.ஸ்ரீராம் பேட்டி
சென்னை: அன்று எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது கொடுத்த புகார் தான் இப்போது செந்தில் பாலாஜி கைதுக்கு காரணம் என வலதுசாரி ஆதரவாளர் எஸ்.எஸ்.ஸ்ரீராம் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு அன்று ஸ்டாலின் கொடுத்த புகார் தான் காரணம் என்று வலதுசாரி ஆதரவாளர் எஸ்.எஸ்.ஸ்ரீராம் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அமலாக்கத்துறை எடுத்துள்ள கைது நடவடிக்கை என்பது நிஜமாகவே அவர்கள் தங்களுடைய விதிமுறைகளை முறையாக பின்பற்றி தான் செய்துள்ளார்கள்.
அதுவும் 2015ல் நடந்த கேஸை பற்றி அன்றைய எதிர்க்கட்சி தலைவரும் இன்றைய முதல்வருமான ஸ்டாலின் அன்றைக்கு வைத்த சரமாரியான குற்றச்சாட்டுகள் தான் காரணம். அதுவும் கவர்னர் வரைக்கும் கூட போய் தவறுகள், முறைகேடுகள் எல்லாம் நடந்துள்ளது என்று புகார் எல்லாம் கொடுத்தார்கள். அந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதை பொதுவாக எல்லாருமே வரவேற்க வேண்டும். நீங்கள்(திமுக) எழுப்பிய குற்றச்சாட்டுக்கு ரிசல்ட் ஆகத்தான் இதை பார்க்க வேண்டும்.
நிச்சயம் கைது விவகாரத்தில் எனோ தானோ என்று அமலாக்கத்துறை முடிவு எடுத்திருக்காது. அதுல அவங்க சரியான விதிமுறைகளை தான் பின்பற்றுகிறார்கள். இதில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது தான் சிறந்ததாக இருக்கும் என்பதுதான் என் கருத்து என்றார். அப்போது ஊடகவியலாளர், ஒரு அமைச்சரை நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த எஸ்.எஸ்.ஸ்ரீராம், சீனியர் புரொபைலில் உள்ள அமைச்சர்கள் போன்றவர்களை கைது செய்ய இந்த மாதிரியான நேரத்தை தான் தேர்வு செய்வார்கள், எந்த ஒரு கலவரமோ, பொதுச்சொத்துக்களுக்கு சேதமோ ஏற்படாமல் இருக்க இதுபோன்ற அதிகாலை நேரத்தில் தான் கைது நடைமுறையை செய்வார்கள். கடந்த காலத்திலும் இப்படித்தான் நாம் பார்த்திருக்கிறோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்டோரை கைது செய்த விவகாரத்திலும் இப்படித்தான் நடந்தது. எல்லாருக்குமே பாதுகாப்பு இந்த மாதிரி நேரத்தில் கைது செய்வதுதான்.
நிச்சயமாக உடல் நிலை பாதித்து இருப்பதால் தான் பாலாஜியை மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள். நிச்சயமாக உடல் நிலையில் எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்வதும் அமலாக்கத்துறையின் பொறுப்பு. இதை செய்வார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது" என்றார்.
இதனிடையே செந்தில் பாலாஜியின் கைது தொடர்பாக அமலாக்கத்துறை நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது: "விசாரணை அதிகாரி கார்த்திக் தசாரிக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய தவறும் பட்சத்தில் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் விசாரணைக்கு எந்தவிதமான ஒத்துழைப்பும் வழங்கப்படவில்லை.
வருமான வரிகணக்கிற்கு முரண்பாடாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கணக்கில் ரூ.1.34 கோடி இருந்தது. செந்தில் பாலாஜியின் மனைவி வங்கி கணக்கில் ரூ.29.55 லட்சமும் இருந்தது. இப்பணம் செந்தில் பாலாஜி வருமான வரிகணக்கிற்கு முரண்பாடாக இருந்தது
செந்தில் பாலாஜியை ஜூன் 14 அதிகாலை 1.39 மணிக்கு தான் கைது செய்தோம்; சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்கான ஆதாரமும், விசாரணைக்கு ஒத்துழைப்பு தராததுமே அவர் கைது செய்யப்பட்டதற்கு காரணம். அதேபோல அவரது சகோதரர் அசோக்குமார், சண்முகம் ஆகியோருக்கும் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை அதனால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" இவ்வாறு அமலாக்கத்துறை தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications