அண்ணாமலைனு பெயர் வைச்ச ரஜினினு நினைப்பா.. கை வைத்து பார், என்ன நடக்கும்னு தெரியும்.. பாயும் கனிமொழி
சென்னை: அரவக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் பேச்சுக்கு கடும் கண்டம் தெரிவித்துள்ள திமுக மகளிரணி தலைவி கனிமொழி, முடிந்தால் திமுகவினர் மீது கை வைத்துப் பார்க்கட்டும் என்று சாவல் விடுத்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை, கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டும் தொனியில் பேசியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இதற்கு திமுக மகளிர் அணித் தலைவி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

கனிமொழி பேச்சு
போடிநாயக்கனூரில் திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வனை ஆதரித்து கனிமொழி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், "அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்த கட்சியின் வேட்பாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை விளக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

பெயர் வைச்ச ரஜினியா
அரவக்குறிச்சியில் பாஜகவில் இருந்து அண்ணாமலை என்று ஒருவர் போட்டியிடுகிறார். பெயர் அண்ணாமலை என்று இருப்பதால் அவர் தன்னை ரஜினி என்று நினைத்துக் கொண்டார் போல. நாம் எல்லாம் பாட்ஷா பார்த்து வளைந்தவர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். அந்த நபர் பிரசாரம் செய்யும் போது, "எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அதைக் காட்ட வைத்து விடாதீர்கள். செந்தில் பாலாஜி தூக்கிப் போட்டு மிதிச்சிருவேன்" என்று சொல்கிறார்.

கை வைத்து பார்
இவர்கள் எல்லாம் இப்படி மோசமானவர்கள் தான். தைரியம் இருந்தால் திமுகவினர் மீது கை வைத்துப் பார்க்கட்டும். இதுபோல எத்தனை போரை பார்த்துள்ளோம். பலரது பேச்சுகள், மிரட்டல்கள், அடிகளை எல்லாவற்றையும் ஊதி தள்ளிவிட்டுத் தான் திமுக இந்த இடத்தில் உள்ளது. திமுகவினரை யாராலும் மிரட்ட முடியாது. நாங்கள் எழுந்து நின்றாலே நீங்கள் எல்லாம் தாங்க மாட்டீர்கள்.

யாகாவாராயினும் நாக்காக்க
மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாடு இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குத் திரண்ட இளைஞர்கள் ஞாபகம் இருக்கிறதா? இந்த மிரட்டல் எல்லாம் இங்க வேண்டாம். எப்போது என்ன பேச வேண்டும் என்பதை உணர்ந்து நாக்கை அடக்கி காத்துப் பேச வேண்டும். உங்கள் பிரதமர் கூறும் திருக்குறளான யாகாவாராயினும் நாக்காக்கக் குறளை நீங்கள் முதலில் பின்பற்றுங்கள்" என்று கனிமொழி கடுமையாகச் சாடி பேசினார்.












Click it and Unblock the Notifications