ஆகஸ்ட் 30 முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு சிக்கல்
சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 30 முதல் காலவரையற்ற முறையில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் சென்னை உள்பட 4 மாவட்டங்கள் பிரச்சனையை சந்திக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு டேங்கர் லாரிகள் மூலம் தினமும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வீடு, கடை, மருத்துவமனைகளுக்கு தேவையான தண்ணீரை பெரும்பாலும் இந்த டேங்கர் லாரிகள் தான் வழங்கி வருகின்றன.

இத்தகைய சூழலில் தான் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் திடீரென்று தொடர் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் தொடர்பான முடிவு என்பது தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி முதல் 4 மாவட்டங்களில் தண்ணீர் லாரி உரிமையாளர் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அன்றைய தினம் தண்ணீர் டேங்கர் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தண்ணீர் எடுக்கும் போர்வெல்லுக்கு அரசியிடம் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அனுமதி கோரியுள்ளனர். ஆனால் அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தண்ணீர் எடுக்கும் போர்வெல்லை அனுமதிக்கு அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக ஓஎம்ஆர், ஈசிஆர் மற்றும் அதனை சுற்றி உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதுதவிர கடைகள், மருத்துவமனைகள், ஓட்டல்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதனால் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் என்பது சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் போராட்டத்துக்கு தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க அரசு சார்பில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications