நான் என்ன ரப்பர் ஸ்டாம்ப்பா? திமுக அரசுடன் ஆளுநர் ரவி பகிரங்க மோதல்-அடுத்து என்ன? பரபரக்கும் டெல்லி!
சென்னை: ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்பு அல்ல; ஆளுநர் ஒரு மாநில அரசின் மசோதாவை தடுக்க முடியும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கேரளாவில் பேசியிருப்பது புதிய பிரச்சனையாகி உள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒவ்வொரு பேச்சும் ஏதோ ஒரு வகையில் பிரச்சனைக்குரியதாக உருவெடுத்து வருகிறது. இந்துத்துவா ஆதரவு, இந்தி ஆதரவு என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய பேச்சுகள் தமிழக தலைவர்களை கொந்தளிக்க வைத்தது.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில், அது கார் குண்டுவெடிப்புதான்; ஏன் 4 நாட்கள் கழித்து மாநில அரசு என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஒப்புக் கொண்டது? பயங்கரவாதிகள் முக்கியமான ஆதாரங்களை அழித்துவிட்டனர் என்றெல்லாம் ஆளுநர் ரவி பகிரங்கமாக பேசிய பேச்சு விமர்சிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் குட்டு
தமிழக அரசின் பல முக்கியமான மசோதாக்கள் மீது எந்த ஒரு முடிவும் எடுக்காமல் கிடப்பிலேயே போட்டு வைத்திருக்கிறார் ஆளுநர் ரவி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காதது தொடர்பாக உச்சநீதிமன்றம் மிக கடுமையாக விமர்சித்திருந்தது. ஒரு கட்டத்தில் ஆளுநரைப் புறக்கணித்துவிட்டு 7 தமிழரையும் விடுதலையும் செய்துவிட்டது உச்சநீதிமன்றம். இதனால் தார்மீக அடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்தாக வேண்டும் என்பதும் தமிழக தலைவர்களின் குரல்.

1 லட்சம் பேர் முற்றுகை
அத்துடன் டிசம்பர் 29-ந் தேதி ஆளுநர் பதவி விலக வலியுறுத்தி 1 லட்சம் பேருடன் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்தும் உள்ளார். ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என ஜனாதிபதியிடம் திமுக எம்.பிக்கள் மனுவும் கொடுத்துள்ளனர்.

திராவிட இனமே இல்லை
இப்போது ஆளுநர் ரவி அடுத்தடுத்து புதிய சர்ச்சைகளை உருவாக்கி உள்ளார். திராவிடர் என்பது ஒரு இனமே இல்லை; ஆங்கிலேயர்கள் உருவாக்கியது அது. அதனை இன்னமும் பின்பற்றுகிறார்கள். தமிழகத்தில் பழங்குடி மக்களுக்கான 1% இடஒதுக்கீடு போதுமானது அல்ல என பேசியிருக்கிறார். திராவிடம் என்ற சொல் ஆங்கிலேயருக்கு முந்தைய காலத்தில் இருந்தே பயன்பாட்டில் உள்ள சொல் என்பதன் அடிப்படையில் ஆளுநர் ரவி விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல
இதனைத் தொடர்ந்து கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஆளுநர் ரவி பேசியதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்படுள்ளவை: ஆளுநர் பதவி அமைப்பு முறை முக்கியமானது. லோக் ஆயுக்தா போன்ற அமைப்புகளை வலுவிழக்கச் செய்யும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் போது பங்காற்றுவதற்கு ஆளுநர்களுக்கு பொறுப்பு உள்ளது. ஆளுநர்கள் அதில் முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல.

மசோதாக்களை தடுக்கலாம்
அரசியலமைப்பு விதி 200-ன் கீழ், மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததாகவோ அல்லது மசோதாவை தடுத்து நிறுத்துவதாகவோ அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக வைத்திருப்பதாகவோ ஆளுநர் அறிவிக்கலாம். அது அரசியலமைப்பு உட்பட்டது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

பேசுகிறவர்கள் பேசட்டும்..
ஆளுநர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று அனைத்து வகையான குரல்களும் ஒலிக்கப்படுகின்றன. அந்த லிகள் முக்கியமில்லை. முக்கியமானது எதுவென்றால், அது இந்திய அரசியலமைப்பு. உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றங்களும் அரசியலமைப்பை வெளிப்படுத்தும் அமைப்புகள். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது அடுத்தடுத்த சர்ச்சை நிழல்கள் படிவதை டெல்லி உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications