சட்டசபையில் சம்பவம்.. வாழ்த்து மழையில் ஸ்டாலின் - கர்வமா இருக்கு தலைவரே! மா.சுப்ரமணியன் புகழாரம்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், "நாங்கள் உங்கள் குறித்து பெருமை கொள்வது மட்டுமல்ல கர்வமும் கொள்கிறோம் தலைவரே" என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பாராட்டி இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகம் என்றே தமிழ்நாட்டை உச்சரிக்க வேண்டும் என்று பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் வளர்ச்சித் திட்டங்கள், நோக்கங்கள், செயல்பாடுகள் குறித்து பேசினார்.

ஆளுநர் உரை
அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கட்சிகள் சட்டப்பேரவையில் அவருக்கு எதிராக முழக்கமிட்டு ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில், அரசு குறிப்பிட்டு இருந்த தகவல்களை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தது சர்ச்சைக்கு உள்ளானது.

வார்த்தைகள் எங்கே?
குறிப்பாக தமிழ்நாடு அரசு குறிப்பிட்டு இருந்த பெரியார், அண்ணா, கலைஞர், சுயமரியாதை போன்ற வார்த்தைகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு என்று சொல்லாமல் திஸ் கவர்மெண்ட் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி படித்ததாகவும், தமிழ்நாடு திராவிட மாடல் ஆகிய வார்த்தைகளை அவர் படிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

பத்தியை காணவில்லை
அதாவது, "சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்குகிறது." என்று அரசு குறிப்பிட்டு இருந்ததை ஆளுநர் படிக்காமல் தவிர்த்து உள்ளார்.

அமைதி பூங்கா மிஸ்ஸிங்
அந்த வரிசையில், "தமிழ்நாடு அரசு சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாண்டு வருவதால் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது." என்று தமிழ்நாடு அரசு எழுதி இருந்த வரியையும் ஆளுநர் ரவி வாசிக்காமல் கடந்து சென்று உள்ளார். ஆளுநர் உரைக்கு பிறகு சபாநாயகர் அப்பாவு அதன் தமிழாக்கத்தை வாசித்தபோதுதான் ஆளுநர் தவறவிட்ட வார்த்தை என்னவென்பதே முழுமையாக தெரியவந்தது.

ஸ்டாலின் கண்டனம்
சபாநாயகர் உரை முடிந்த பிறகு எழுந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி படிக்காதது தவறு." என்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் முன்பாகவே கண்டித்தார். தாமாக முன்வந்து ஆளுநர் வாசித்த உரையை சட்டசபையின் அவைக்குறிப்பில் இருந்து நீக்கும் தீர்மானத்தை அவர் முன்மொழிந்தார். அந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

தேசிய கீதத்துக்கு முன் வெளியேறிய ஆளுநர்
இதனால், அங்கிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே வெளிநடப்பு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதத்தை அவமதித்துவிட்டதாக சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்கள்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ள தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் "நேற்றைய சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து "Longest Self Respect Moment (நீளமான சமூகநீதி இயக்கம்)" ன் "Tallest Leader Stalin (உயர்ந்த தலைவர் ஸ்டாலின்)"என்று இன்று காலை மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் என்னிடத்தில் பெருமைபட்டுக்கொண்டார்.நாங்கள் உங்கள் குறித்து பெருமை கொள்வது மட்டுமல்ல கர்வமும் கொள்கிறோம் தலைவரே..." என்று பதிவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications