தமிழகம் முழுவதும் லாக்டவுனை நீட்டிக்க அரசுக்கு பரிந்துரைக்கவில்லை: மருத்துவ வல்லுநர் குழு
சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் முழு லாக்டவுனை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்கவில்லை என்று மருத்துவ வல்லுநர் குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது. மேலும் தற்போது நடைமுறையில் இருக்கும் தளர்த்தப்பட்ட லாக்டவுன் நாளையுடன் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில் மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் சுமார் 2 மணிநேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மருத்துவர் வல்லுநர் குழுவின் பிரதிநிதிகள் பிரதீப் கவுர் உள்ளிட்டோர் கூறியதாவது:

மேலும் 4 மாவட்டங்களில்...
சென்னையைப் போல திருச்சி, மதுரை, திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. சென்னையில் நடத்தப்பட்ட காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் பெருமளவு கை கொடுத்திருக்கின்றன. இதேபோல் பிற பகுதிகளிலும் இத்தகைய முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என கூறியிருக்கிறோம்.

காய்ச்சல் கண்டறியும் முகாம்கள்
காய்ச்சல் கண்டறியும் முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் பரிசோதித்து கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறியின் தொடக்கத்திலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது. கொரோனா பரவலின் தொடர் சங்கிலியை அறுப்பதுதான் மிக முக்கியமானது. பொதுமக்கள் முக கவசம் அணிவது, கைகளை கழுவுவது ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

தமிழகத்தில் அதிக பரிசோதனை
கொரோனா பாதித்தவர்களுக்கு நவீன சிகிச்சை அளிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கொரோனாவை கண்டு அச்சப்பட தேவை இல்லை. 80% நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு மிக மிக குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் 32,000 பேருக்கு நாள்தோறும் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

லாக்டவுன் நீட்டிப்புக்கு பரிந்துரை இல்லை
கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் லாக்டவுனை அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைக்கவில்லை. கொரோனாவுக்கு லாக்டவுன் மட்டுமே தீர்வும் அல்ல. லாக்டவுன் என்பது கொசுவை கொல்ல கோடாரியை பயன்படுத்துவது போன்றது. இவ்வாறு மருத்துவ வல்லுநர்கள் குழுவினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications