கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனுக்கு வரம்பு இருக்கு... ஆனா நிறுத்தவில்லை...முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தி வைக்கப்படவில்லை.கடன் வழங்குவதற்கு என்று வரம்பு உள்ளது. வங்கிகளில் வைப்புத்தொகை பாதிக்கப்படாத வகையில் நகைக் கடன் வழங்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் எடபப்டி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனை நிறுத்தி வைக்குமாறு கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பித்து இருப்பதாக நேற்று செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து பல்வேறு தரப்பிலும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருந்தது. இதில் கிராமத்தில் இருக்கும் கூட்டுறவு வங்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வெளியான அறிவிப்பால், பல தரப்பிலும் இருந்தும் கண்டனம் எழுந்தது.

கொரோனா தாக்கம் அதிகரித்து, வேலை வாய்ப்புகளை இழந்து, கடன் பெறும் நிலையில் மக்கள் உள்ளனர். இந்த நேரத்தில் கடனை வழங்குவதை நிறுத்துவதா என்ற கேள்வி எழுந்தது. கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டிக்கு நகைக் கடன் கிடைப்பதால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பொதுவாக கூட்டுறவு வங்கிகளை நாடிச் செல்வது வழக்கம். இந்த நிலையில் வெளியாகி இருந்த அறிவிப்பு அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.
இன்று காலை பேட்டி அளித்து இருந்த அமைச்சர் ஜெயக்குமார், கூட்டுறவு வங்கி கடன்களை நிறுத்தவில்லை என்று தெரிவித்து இருந்தார். இதையடுத்து தற்போது முதல்வரும் அதே கருத்தை வெளியிட்டுள்ளார்.
நேற்று தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் (சட்டம் மற்றும் பயிற்சி) ஒரு குறுஞ்செய்தியை அனைத்து மாவட்ட மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ளனர். அதில், தமிழகத்திலுள்ள மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 23 மத்திய கூட்டுறவு, 128 நகர கூட்டுறவு வங்கிகள், 4250 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் நகைக் கடன் வழங்குவதை நிறுத்தி வைக்க ஆணையிடப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் வாழ்வாதாரங்களையும் இழந்த நிலையில் நகைகளை வைத்து கடன்கள் பெற முடியாமால் மக்களும் , விவசாயிகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்போது மீண்டும் கடன்கள் வழங்கப்படும் என்பது குறித்த தகவல்களும் இல்லை. இதனால், வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் மீண்டும் எப்போது கடன் வழங்கப்படும் என்ற தகவலை அளிக்க முடியாமல் குழப்பத்தில் வங்கி அதிகாரிகள் உள்ளனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications