மலைமுழுங்கி மகாதேவன்.. “ஆதாரம் இருக்கு” இதுக்கு என்ன சொல்றீங்க?- ‘பில்’ எடுத்து நீட்டிய ஜெயக்குமார்!
சென்னை : விளம்பர பேனர் ஒன்றுக்கு 7,906 ரூபாய் செலவில் அச்சடிக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் அனுப்பிய சுற்றறிக்கை இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநரைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு மீதான ஊழல் புகார்களைத் தெரிவித்தார். உள்ளாட்சித்துறையில் பேனர் அடிப்பதில் மெகா ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டினார்.
350 ரூபாய் மதிப்பிலான ஒரு பேனருக்கு 7,906 ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டதாக ஈபிஎஸ் குற்றம்சாட்டினார். அதற்கு மறுப்புத் தெரிவித்த அமைச்சர் கேஆர் பெரியகருப்பன், 611 ரூபாய் தான் பேனர் ஒன்றுக்கு செலவிடப்பட்டது, எடப்பாடி கூறுவது பொய் என விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், தஞ்சாவூரில் ஒரு விளம்பர பேனர் 6,700 ரூபாய்க்கு அச்சடிக்கப்பட்டு, ஜிஎஸ்டி வரி 603 உட்பட மொத்தமாக 7,906 ரூபாய் செலவு கணக்கிடப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரம் இருக்கிறது என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈபிஎஸ் அதிரடி புகார்
கிராம ஊராட்சிகளில் 'நம்ம ஊரு சூப்பரு' எனும் திட்டத்திற்காக விளம்பர பேனர் வைத்ததில் ஊழல் நடைபெற்று இருந்ததாகவும், 350 ரூபாய் மதிப்பிலான ஒரு விளம்பர பேனருக்கு மட்டுமே 7,906 ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டதாகவும் உள்ளாட்சி துறையில் மெகா ஊழல் நடந்துள்ளது என்றும் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
அமைச்சர் மறுப்பு
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுவது உண்மைக்கு புறம்பான தகவல். பேனர் ஒன்றுக்கு 611 ரூபாய் தான் செலவு. அச்சடிக்கும் செலவு , ஜிஎஸ்டி உட்பட இதுதான் மொத்த செலவு. இதற்கான நிதியை ஊராட்சி மன்றங்களே வழங்கின. ரூபாய் 7,906 என்பது முற்றிலும் தவறான தகவல்' என விளக்கம் அளித்தார்.
நீங்க தான்
மேலும், ஒரே ஒரு தனியார் நிறுவனத்திற்கு பேனர் அச்சிட ஆணை வழங்கப்பட்டதாக கூறுவதும் தவறு. மெகா ஊழல் என அடிப்படை ஆதாரம் இன்றி எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டுகிறார், அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் பேனரில் கூட ஊழல் செய்திருக்கிறார்கள். ரூ. 2,800 மதிப்பிலான பேனர்களை அனைத்து ஊராட்சிகளிலும் நிறுவினார்கள். அதற்கு போடப்பட்ட தொகை ரூ.28,000 எனத் தெரிவித்தார்.
ஆதாரம் இருக்கு - 7,906 ரூபாய்
அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனின் இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், 'நம்ம ஊரு சூப்பரு' இயக்க விளம்பர பேனர் ஒன்றுக்கு 7,906 ரூபாய் செலவில் அச்சடிக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் அனுப்பிய சுற்றறிக்கை இருக்கிறது. பிரிண்டிங் நிறுவன பில்லும் இருக்கிறது.
6,700 + ஜிஎஸ்டி
தஞ்சாவூரில் ஒரு விளம்பர பேனர் 6,700 ரூபாய்க்கு அச்சடிக்கப்பட்டு, ஜிஎஸ்டி வரி 603 உட்பட மொத்தமாக 7,906 ரூபாய் செலவு கணக்கிடப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரம் இருக்கிறது தஞ்சாவூரில் 14 ஒன்றியங்கள் உள்ளன. 14 ஒன்றியங்களில் 589 கிராம பஞ்சாயத்துகள் இருக்கின்றன. அந்த 589 ஊராட்சிகளுக்கும் பிடிஓ மூலம் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது, இப்படி ஒரு பேனருக்கு 7,906 ரூபாய் கொடுத்தது தெளிவாக இருக்க்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
மலைமுழுங்கி மகாதேவன்
மேலும் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் பல துறைகளில் ஊழல் செய்து குடும்பமாக பணம் கொள்ளையடித்து வருகிறது திமுக ஆட்சி. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் தான் திமுக ஆட்சியில் இருக்கிறது. எலுமிச்சம் பழத்தை மறைப்பவர்களை பார்த்திருக்கலாம், பூசணிக்காயை மறைப்பவர்களை பார்த்திருக்கலாம். மலைமுழுங்கி மகாதேவனை பார்த்திருக்கிறீர்களா? அதுதான் திமுக.
மக்களின் பணம்
300 ரூபாயில் தயாரிக்க வேண்டிய ஒரு பேனருக்கு இவ்வளவு அதிக பணம் திமுக ஆட்சியில் செலவழிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துகள் இருக்கின்றன. ஒரு பேனருக்கு இவ்வளவு என்றால் நீங்களே கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். இது மக்களின் பணம். அதை அவர்கள் கொள்ளையடிக்கிறார்கள்" என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.