தமிழகத்தில் 120 நாட்களில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் - மு.க ஸ்டாலின்
ஒற்றுமை, சகோதரத்துவம், அனைவரும் சமம் ஆகிய உன்னத நோக்கை நிறைவேற்றும் தென்னிந்திய திருச்சபைக்கு இதய பூர்வமான நல்வாழ்த்துக்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை: திமுகவை பொறுத்தவரையில் சொன்னதை செய்வோம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 200 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நான்கு மாதங்களுக்குள் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிய அரசு, இந்தியத் துணைக்கண்டத்திலேயே தி.மு.க. அரசாகத்தான் இருக்கும் என்றும் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் நடைப்பெற்று வரும் தென்னிந்திய திருச்சபையின் பவளவிழா கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். அப்போது, ஒற்றுமை சகோதரத்துவம் அனைவரும் சமம் ஆகிய உன்னத நோக்கை நிறைவேற்றும் தென்னிந்திய திருச்சபைக்கு இதய பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் எனவும் கூறினார்.

தென்னிந்திய திருச்சபை கடந்த 1947ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களை உள்ளடக்கி, 24 பேராயர்களும், 40 லட்சம் நேரடி உறுப்பினர்களை கொண்டு தென்னிந்திய திருச்சபை செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், 75வது ஆண்டு தொடக்க விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து பவள விழா இலச்சினையை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், திருச்சபையின் பிரதம போராயர் தர்மராஜ் ரசாலம், துணை பிரதம பேராயர் ரூபன் மார்க், திருச்சபையின் பொது செயலாளர் பெர்னாண்டஸ் ரத்னராஜா, பொருளாளர் விமல்குமார், அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன், இனிக்கோ இருதயராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்று வரக்கூடிய அரசு, உங்களால் உருவாக்கப்பட்ட அரசு. ஒற்றுமை சகோதரத்துவம் அனைவரும் சமம் ஆகிய உன்னத நோக்கை நிறைவேற்றும் தென்னிந்திய திருச்சபைக்கு இதய பூர்வமான நல்வாழ்த்துக்கள்.
திறந்த உலகின் சிறந்த திருசபை. நாடும் முழுவதும் கல்வி நிறுவனங்களை உருவாக்கி அனைவருக்கும் கல்வி எனும் இலக்கை நிறைவேற்றி வரும் இந்த திருச்சபை இந்தியாவின் கருவூலம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார்.

இன்று தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசு உங்களால் உருவான அரசு. தேர்தல் நேரத்தில் போட்டியிடும் கட்சிகள் வாக்குறுதிகளை வழங்குவது வழக்கம் ஆனால் திமுகவை பொறுத்தவரையில் சொன்னதை செய்வோம் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 200 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மே 7ஆம் தேதி பதவியேற்ற சில மணி நேரத்திலேயே ஐந்து முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.4,000 கொரோனா நிவாரண நிதியுதவி. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு. மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம். மக்களின் மனுக்கள் மீது தீர்வுகாண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவினத்தை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் அரசே ஏற்பு. இந்த ஐந்தில் முதல் நான்குமே திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தவை.
வேளாண்மை உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும், முதன்முறையாக வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்துவது. 'நமக்கு நாமே' திட்டத்தை உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்துவது.
"இயற்கை வேளாண்மை வளர்ச்சித்திட்டம்" என்ற உன்னதத் திட்டம் நடப்பு 2021-22-ஆம் ஆண்டு செயல்படுத்துவது.
அண்ணா நூற்றாண்டு நூலகம் புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைத்தல் மற்றும் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைத்தல்.
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு 3 கோடி ரூபாய், வெள்ளிப்பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு 2 கோடி ரூபாய் மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்குதல்.
பத்திரிகையாளர்கள்; இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், மீத்தேன், நியூட்ரினோ , கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் எட்டுவழிச் சாலைத் திட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள், பொதுமக்கள் மீது போடப்பட்ட 5,570 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. NEET தேர்விலிருந்து விலக்குப் பெறுவதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் தாக்கல் செய்தல் மற்றும் தீர்மானம் நிறைவேற்றுதல்.
கொரோனா சிகிச்சைப் பணியில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 இலட்சம் ரூபாய் கொரோனா இழப்பீட்டுத் தொகை. கொரோனா நோய்த்தொற்றால் காவல்துறையில் உயிரிழந்த காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்குத் தலா 25 லட்சம் ரூபாய் வீதம் நிவாரணத்தொகை.
குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த அனைத்து நபர்களுக்கும் பதினைந்து நாட்களுக்குள் 'ஸ்மார்ட் கார்டு' வழங்குதல். இத்திட்டத்தின்கீழ் 5 இலட்சத்து 49 ஆயிரத்து 505 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசிற்கு ஆலோசனைகளை வழங்கிட முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பணியிலிருக்கும்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு, குடும்பப் பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவித் தொகை 3 இலட்சம் ரூபாயிலிருந்து 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. ஸ்டெர்லைட் சம்பவம் குறித்து தவறாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்பட்டது.
மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறுகால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது. அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40% ஆக உயர்வு. வாக்குறுதிகளில் இப்படி, தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
அதேபோல், ஆளுநர் அறிக்கையில் 51 வாக்குறுதிகளும்; முதல்வர் பதிலில் இரண்டு வாக்குறுதிகளும்; நிதிநிலை அறிக்கையில் 43 வாக்குறுதிகளும்; வேளாண் நிதி நிலை அறிக்கையில் 23 வாக்குறுதிகளும்; அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகளில் 64 வாக்குறுதிகளும்; இதர அறிவிப்புகளில் 16 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. மொத்தம் 202 வாக்குறுதிகள் அரசின் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications