இன்னும் எத்தனை உயிர்களை இழக்க வேண்டும்? இரக்கமற்ற அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும்? ஸ்டாலின்
சென்னை: நீட் தேர்வுக்கு தயாரான அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியைச் சேர்ந்த மாணவன், விக்னேஷ் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கிடைத்துள்ள தகவல் மனவேதனையை ஏற்படுத்துகிறது என்று ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த எலந்தங்குழியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 500-க்கு 486 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1,006 மதிப்பெண்களும் பெற்றிருந்தாக கூறப்படுகிறது.
இரு ஆண்டுகளுக்கு முன்பே 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று விட்ட அவர், மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வு எழுதி வந்துள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 370 மதிப்பெண்களை விக்னேஷ் பெற்றார். அவருக்குத் தனியார் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்தது. ஆனால், அவரது குடும்பத்தினருக்கு தனியார் கல்லூரியில் சேர்க்க வசதி இல்லாததால், இந்த ஆண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதத் தயாராகி வந்தார்.
நீட் தேர்வில் 500-க்கும் கூடுதலான மதிப்பெண்கள் பெற்றால் மட்டும்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கூறியதால் கடுமையான மன உளைச்சலில் விக்னேஷ் இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை அவரது வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
அவசரம் - அரைவேக்காட்டுத்தனம்.. அரியர் பாஸ் விவகாரத்தில் தமிழக அரசு மீது ஸ்டாலின் கடும் தாக்கு
இந்த சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின், நீட் தேர்வுக்கு தயாரான அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியைச் சேர்ந்த மாணவன், விக்னேஷ் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கிடைத்துள்ள தகவல் மனவேதனையை ஏற்படுத்துகிறது.
இன்னும் எத்தனை உயிர்களை இழக்க வேண்டும்? இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும்?
இந்த நேரத்தில் மாணவச் செல்வங்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள்: எத்தகைய சோதனைகளையும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக எதிர்கொள்ளுங்கள். தற்கொலை எண்ணத்தை விடுங்கள்!" என்று கூறியுள்ளார்.