வாங்க வாங்க.. அட.. இந்த விஷயத்துக்காக மோடியை தாராளமா வரவேற்கலாமேப்பா.. கோ பேக் தேவையில்லையே!
பிரதமர் மோடியை நாம் வரவேற்பது மிக அவசியமான ஒன்றாகிறது
Recommended Video
சென்னை: வேலை மெனக்கெட்டு, சீன அதிபரை இழுத்து கொண்டு, நம்ம ஊருக்கு வந்திருக்கும் மோடியை தமிழகமே இந்த நேரத்தில் வரவேற்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
வழக்கமாக மோடி தமிழகம் வந்தால், எதிர்ப்புகளும், விமர்சனங்களும், சலசலப்புகளும் அதிகமாகவே எழும். இது மோடியும் நன்கு அறிந்த ஒன்றுதான். கோ பேக் மோடி என்ற வாசகத்தை கிளப்பி விட்டது தமிழகம்தான் என்பதையும் தெரிந்துதான் வைத்துள்ளார். இருந்தாலும் தன் போக்கிலும், பேச்சிலும் மோடியின் உறுதிப்பிடிப்பு இன்றைய ட்வீட்டிலும் நன்றாகவே தெரிகிறது.
"சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

வருகை
பொதுவாக, எதிர்ப்பினை பதிவு செய்வது என்பது அவரவர் தார்மீக உரிமை என்றாலும், இந்த முறை பிரதமரின் வருகையை நாம் அப்படி சாதாரணமாக பார்த்துவிட முடியாது. மோடி நினைத்திருந்தால், சீன அதிபரை வசதியாக டில்லியிலேயே வைத்து சந்தித்து இருக்கலாம். இப்படி கூடவே இழுத்துக்கொண்டு அவரும் மகாபலிபுரம் வருகிறார் என்றால், அது மிகப்பெரிய விஷயமே.

சீனா
தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு நகரிலும் இப்படி ஒரு உலகத் தலைவர் சந்திப்பு நடந்ததில்லை. அதை இங்கு நடத்த இந்தியாவும், சீனாவும் முடிவு செய்திருப்பது தமிழகத்திற்கு உலக அரங்கில் பெருமை தேடித் தந்துள்ளது. ஒட்டுமொத்த உலகின் பார்வையும் தமிழகத்தின் மீது படிந்துள்ளது.

யுவான் சுவாங்
யுவான் சுவாங் பல்லவ நாட்டுக்கு வந்தார், சீன நாட்டுடன் கடல் வழி வியாபாரம் மாமல்ல புரம் வழியாக நடந்தது, சோழர்கள் காலத்திலும், சீனாவுடனான வணிக தொடர்புகள் நடந்தன என்று இவைகளை நாம் வரலாற்றில் படித்திருந்தாலும், அதை கண்ணெதிரே காணும் நிகழ்வாக இந்த வருகை பார்க்கப்படுகிறது.. நம் மனதில் பதியப்பட்டு வருகிறது!

பாரம்பரியம்
மேலும் மாமல்லபுரத்தின் பெருமை, பாரம்பரியம், தொன்மை மட்டுமல்லாமல் கூடவே கீழடி குறித்த உலகத்தின் கவனத்தையும் ஈர்க்க சீனத் தலைவரின் இந்த தமிழக விசிட் உதவும். இதுவரை இந்தியா என்றால் டெல்லி, மும்பை, மிஞ்சிப் போனால் பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா என்பது மாறி, தமிழகத்தின் மீதும் உலகின் பார்வை அதிகமாக விழ வாய்ப்புள்ளது

பாஜக
எத்தனையோ விமர்சனங்கள் வந்தாலும் சரி, பிரதமர் தமிழ்மொழி, தமிழ்நாடு மீதான தனது உறுதிப்பிடிப்பை மாற்றி கொள்ளாமலேயே இருக்கிறார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று ஐநாவில் முழக்கமிட்டபோதே இது நன்றாகவே புரிய தொடங்கிவிட்டது. தமிழகத்தில் பாஜக காலூன்ற வேண்டும் என்றால், ஆயிரம் வழிகள் இருக்கும்பட்சத்தில், ஐநாவில் போய் தமிழை போற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், மோடி, தொடர்ந்து தமிழை உயர்த்தி பிடித்து வருகிறார். தமிழகத்தை நெருக்கத்துடனேயே வைத்திருக்க முயற்சிக்கிறார்.

பழமை
இன்று உலகமே பார்ப்பது வெறும் சீன அதிபரை மட்டும் இல்லை.. நம் தொன்மையையும்தான்.. நம் பழமையையும்தான்.. நம் பெருமையையும்தான்.. இதற்கே மோடிக்கு ஆயிரம் கோடி நன்றிகளை நாம் சொல்லலாம். இந்த விஷயத்தில் கட்சி பாகுபாடு மறந்து எல்லோருமே மோடியை பாராட்ட வேண்டும். வெளிமாநிலத்தை சேர்ந்த மோடி, வெளிநாட்டை சேர்ந்த அதிபர்களே நம் மண்ணின் பெருமையை பற்றி பேசும்போது, இதை நாம் உச்சிமுகர்வது தலையாய அவசியமே!

பேசுபொருள்
இந்த வருகையையும் பாஜக அரசியல் தங்களுடைய லாபத்திற்கே பயன்படுத்தி கொள்வதானாலும் சரி.. அதையும் தாண்டி உலக அளவில் தமிழகம் பேசு பொருளாக மாறியிருக்கிறது என்றால் அதற்கு காரணம் பிரதமர் மோடிதான். அந்த விஷயத்தில் அவரை நாம் வரவேற்க வேண்டும்!












Click it and Unblock the Notifications