கோட்டையை கைப்பற்றும் முன் சேப்பாக்கம் தொகுதியை கைப்பற்ற வேண்டும்... குஷ்புவின் ஆசை நிறைவேறுமா
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதியில் இறங்கி வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும். நம் நோக்கம் கோட்டையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை குஷ்பு.
சென்னை: கோட்டையை கைப்பற்றுவதே பாஜக-வின் நோக்கம்; அதற்கு முன் சேப்பாக்கம் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்று குஷ்பு கூறியுள்ளார். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதியில் இறங்கி வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும். நம் நோக்கம் கோட்டையாக இருக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் கட்டாயம் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார் குஷ்பு.
பாஜகவில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதி பாஜக பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் நேற்று நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பேசிய குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த எனக்கு, தற்போது அதை விட குறைந்த பொறுப்பாளர் பொறுப்பு அளித்துள்ளனர் என அனைவரும் கேள்வி கேட்டனர். ஆனால் தற்போதுதான் இறங்கி வேலை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.
பாஜக- அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்?
மக்களை சந்திக்கிறேன்
தேசிய அளவில் பொறுப்பில் இருந்தபோது, ஏ.சி. அறையில் உட்கார்ந்து எதிர்க்கட்சியை விமர்சிக்கும் வேலை மட்டும்தான் இருக்கும். பிரதமர் மோடி நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும், எதிர்கட்சி என்ற காரணத்தால் அதனை விமர்சித்தே ஆக வேண்டும். ஆனால் தற்போது மக்களை சந்தித்து பணியாற்றும் வாய்ப்பு கொடுத்த பாஜக மாநில தலைவருக்கு நன்றி.
சேப்பாக்கம் கோட்டையாக வேண்டும்
சட்டசபைத் தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே உள்ளது. எனவே, அனைவரும் இரவு, பகலாக கடுமையாக உழைக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதுடன், பாஜகவிற்கு மக்கள் வாக்களித்தால் என்ன பயன் இருக்கிறது என்பது குறித்து மக்களிடம் நாம் எடுத்து செல்ல வேண்டும். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதியில் இறங்கி வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும். நம் நோக்கம் கோட்டையாக இருக்க வேண்டும் என்று கூறினார் குஷ்பு.
எடப்பாடி பழனிச்சாமி
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளதை ஏற்கவில்லை என்று யாரும் கூறவில்லை. பாஜக தலைமையிலான கூட்டணி குறித்தும், வேட்பாளர் குறித்தும் தேசிய தலைவர்கள் கூறுவார்கள்.
தொடர் வெற்றி
பாஜக எங்கெல்லாம் ஜெயிக்காது என்று சொன்னார்களோ அங்கெல்லாம் ஜெயித்து காட்டியுள்ளது. ஜம்மு-காஷ்மீர், அசாம், கேரளா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்றார் குஷ்பு.
கருணாநிதி
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, அவர் நடிகராக இருக்கலாம், அவருக்கு அரசியலில் என்ன அனுபவம் இருக்கிறது என கேள்வி எழுப்பினார். திமுகவிற்கு சேப்பாக்கம் தொகுதியில் இருக்கும் 25 சதவிகித வாக்குகள் கருணாநிதியால் உருவாக்கப்பட்டவை. தாத்தாவின் பெயரையும், அப்பாவின் பெயரையும் பயன்படுத்தி உதயநிதி ஸ்டாலின் வெற்றிபெற முடியாது என்று கூறினார் குஷ்பு.
கட்சி மேலிடம் முடிவு
மனு விவகாரத்தில் திருமாவளவனை எதிர்த்து பேசியதில் தனக்கு எந்த முன்விரோதமும் இல்லை என்று கூறிய குஷ்பு, திமுகவில் இருக்கும்போது, திருமாவளவனுக்கு ஆதரவாக, தான் பிரச்சாரம் செய்துள்ளேன் என்றும் கூறினார். தாமரை மலராது என்று நான் தான் சொன்னேன், இப்போது நானே சொல்கிறேன் தமிழகத்தில் கட்டாயம் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் கூறினார். தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். வேட்பாளராக அறிவித்தாலும், அறிவிக்காவிட்டாலும் என் பணி தொடரும் என்று தெரிவித்தார் குஷ்பு. ஆசை இருக்கு அரசாள... அதிர்ஷ்டம் வேண்டுமே. குஷ்புவின் ஆசை நிறைவேறுமா பார்க்கலாம்.