முதல்வர் ஸ்டாலின் இப்படி செய்யலாமா.. இது இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.. அர்ஜுன் சம்பத் குமுறல்
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்துவோம் என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்
சென்னை: "முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள தளர்வுகளின்படி, பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், டாஸ்மாக் கடைகள் போன்றவை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன... விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அரசு அனுமதிக்கவில்லை... இது இந்து மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி" என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றஞ்சாட்டி உள்ளார்.
வரும் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது... எப்போதுமே விநாயகர் சிலைகளை, பிரம்மாண்ட ஊர்வலங்களாக கொண்டு செல்வார்கள்..
ஆனால், கடந்த வருடம் முதல் தமிழ்நாட்டில் தொற்று அதிகமாக இருக்கவும், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன... லாக்டவுனும் அமலில் இருந்தன.

தொற்று
அதனால் எளிய முறையில் வழிபாடு நடத்தப்பட்டது.. பெரும்பாலான இடங்களில் ஊர்வலமே நடத்தப்படவுமில்லை.. இப்போதும் தொற்று குறையவில்லை.. 3வது அலை வரப்போவதாக சொல்லி உள்ளதால், அதற்கான முன்னெடுப்புகளில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.. ஆனால், இப்போதைக்கு 2வது அலை பரவல் குறைந்திருப்பதால், இந்த வருடமாவது, விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட இந்து அமைப்புகள் விருப்பம் தெரிவித்து வருகின்றன.

தனிநபர்கள்
ஆனாலும், கொரோனா அச்சம் காரணமாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது... அதேபோல, சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், நீரில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது... ஆனால், தனி நபர்கள் தங்கள் வீடுகளில் வழிபடும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தடை
இந்நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது "எங்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருந்தோம். ஆனால் இதன் கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்துவிட்டது.

கட்டுப்பாடுகள்
தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள தளர்வுகளின்படி, கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன... ஆனால் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அரசு அனுமதிக்கவில்லை... கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் கொண்டாடுகிறோம் என்று சொல்கிறோம்.. ஆனாலும் அனுமதி இல்லை.

கோரிக்கை
இது இந்து மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.. இதற்கு மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் நாட இருக்கிறோம்.. தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலத்தை தமிழகம் முழுவதும் நடத்துவோம்.. வரும் 5ஆம் தேதி வஉசியின் பிறந்த நாளை சுதேசி நாளாக கொண்டாட இருக்கிறோம்... அதேநாளில் சுதந்திர போராட்ட வீரர் கோபால் நாயக்கருக்கு குருபூஜை நடத்த முடிவு செய்துள்ளோம்... பிறகு, விநாயகர் சதுர்த்தியன்று சிலை ஊர்வலம் நடத்த அனுமதிக்க வலியுறுத்தி, வரும் 6ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டமும், கோரிக்கை மனுவும் வழங்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications