சரணடைந்து வாழ்வதை விட, சண்டையிட்டு சாவதே மேல்… சீமான் கொந்தளிப்பு
Recommended Video

சென்னை: சரணடைந்து வாழ்வதை விட, சண்டையிட்டு சாவதே மேல் என்ற கொள்கையை கொண்டதால் தான், கூட்டணியை புறக்கணித்து தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தங்களது கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னத்தை அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளரிடம் சீமான் பேசியதாவது, நாம் தமிழர் கட்சி 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் தனித்து போட்டியிடும். மயில் சின்னத்தை கேட்டிருந்தோம், ஆனால் தேர்தல் ஆணையம் எங்களுக்கு விவசாயி சின்னத்தை கொடுத்துள்ளது என்றார்.

வேட்பாளர்கள் பட்டியல்
விவசாயிகளையும் விவசாயத்தையும் காக்கவே எங்களுக்கு இந்த சின்னம் கிடைத்துள்ளதாகவும், வரும் 22ஆம் தேதி விருப்ப மனுக்கள் பெறப்பட்ட பின் வேட்பாளர்களை வரும் 23 ஆம் தேதி மயிலை மாங்கொல்லையில் வைத்து ஒட்டுமொத்தமாக அறிவிப்போம் என்றும் கூறினார்.

33% இட ஒதுக்கீடு
20 ஆண் வேட்பாளர்களும், 20 பெண் வேட்பாளர்களும் எங்கள் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளனர் என்றும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் 33% இட ஒதுக்கீட்டை பெண் வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என போராடி வரும் நாங்கள் எங்கள் கட்சி மூலம் அதை முதலில் கொண்டு வருவோம் எனவும் தெரிவித்தார்.

சாதாரணமப்பா
அரசியல் கட்சிகளின் கூட்டணி நிலைபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், கவுண்டமணி காமெடியை சுட்டிக்காட்டி "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா" என்றார். தி.மு.க தேர்தல் அறிக்கையில் விவசாயத்திற்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது குறித்து பதிலளித்த அவர், இதை முன்பே செய்திருக்க வேண்டும் எனவும் இனியாவது இதை நிறைவேற்ற அனைவரும் பாடுபடவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சுழற்சி முறை
ஹிந்தி தெரிந்தவர் மட்டுமே பிரதமராக முடியும் என்ற முறையை மாற்ற வேண்டும் என்றும், சுழற்சி முறையில் பிரதமர், குடியரசுத் தலைவர் பதவிகளை ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழங்க வேண்டும் எனவும் சீமான் பேசினார்.

பாஜக குறித்து விமர்சனம்
கோயில்களில் ஆடு, மாடுகளை பலி கொடுப்பதுபோல ராணுவ வீரர்களின் உயிரை பா.ஜ.க அரசு பலிகொடுத்துள்ளது என்று கடுமையாக சாடிய சீமான், எத்தனையோ உயர்மட்ட பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கு தெரியாமல் 1 கி.மீ தூரம் வரை தீவிரவாதிகள் எவ்வாறு நுழைந்திருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

சமரசம் இல்லாத தலைவர்
சமரசம் இல்லாத தலைவரையே நாங்கள் எதிர்பார்த்தோம், எனவே கூட்டணிக்கு அழைத்தவர்களை புறக்கணித்தோம் என்று கூறியுள்ள சீமான் சரணடைந்து வாழ்வதை விட, சண்டையிட்டு சாவதே மேல் என்ற கொள்கையை கொண்டதால் எங்கள் கட்சி கூட்டணியை புறக்கணித்து தனித்து போட்டியிட முடிவெடுத்தது என்றார்.

நாடகக் கம்பெனி
தேர்தல் ஆணையம் ஒரு நாடக கம்பெனி, ஒப்புக்காக விதிகளை விதித்துவிட்டு அதை கடைபிடிக்க மறுப்பதாகவும் சீமான் குற்றம் சாட்டினார். எங்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது, அது ஏனென்றால் உயிரை கொடுத்தாவது விவசாயிகளை நான் காப்பாற்றி விடுவேன் என்பதால் தான்.

முழக்கம்
மேலும், உழவு இல்லையேல் உணவு இல்லை; உணவு இல்லையேல் உயிர்கள் இல்லை; உயிர்கள் இல்லையேல் உலகு இல்லை; உழவை மீட்போம்! உலகை காப்போம்! என்ற முழக்கத்தோடு தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறினார்.












Click it and Unblock the Notifications