அதெல்லாம் கிடையாது, எடப்பாடியார்தான் எப்பவும் முதல்வர்.. அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி!
எடப்பாடி பழனிச்சாமிதான் என்றும் முதல்வர் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். முதல்வர் பற்றிய செல்லூர் ராஜூவின் கருத்துக்கு எதிராக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
சென்னை: முதல்வர் யார் என்ற பிரச்சினைக்கு முதல்வரும் துணை முதல்வரும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. எடப்பாடி பழனிச்சாமிதான் என்றும் முதல்வர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியோ, திமுக ஆட்சியோ எப்போதுமே முதல்வர் யார் என்பதில் எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. கருணாநிதி இருந்தவரைக்கும் திமுக ஆட்சி என்றால் அவர்தான் முதல்வர் அதே போல அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரைக்கும் அவர்தான் இறுதிவரை முதல்வராக இருந்தார்.

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என மாறி மாறி முதல்வராகி விட்டனர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் முதல்வராக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றன.
சட்டசபை தேர்தல் களத்தில் அதிமுகவும் புயல் வேகத்தில் இருப்பதாக கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தேர்தல் வெற்றிக்கு பிறகு எம்எல்ஏக்கள் கூடி முதல்வரை முடிவு செய்வோம் என்று கூறினார். இது அதிமுகவில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் எடப்பாடியார்தான் என்றும் முதல்வர் என்று கூறியுள்ளார்.

எடப்பாடியார் என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம்!
களம் காண்போம்! வெற்றி கொள்வோம்! 2021ம் நமதே! என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முதல்வரும் துணை முதல்வரும் முதல்வர் பற்றிய பஞ்சாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications