பரதன் ஓபிஎஸ்... சசிகலாவிற்கு ஆதரவு கொடுத்தால் வரவேற்போம் - தூது விடும் தினகரன்
சசிகலாவிற்கு ஆதரவு கொடுத்தால் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் பரதனாகலாம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: பரதனாக இருந்த ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தவறான முடிவால் ராவணனுடன் சேர்ந்தார் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். தற்போது அவர் மனகசப்பில் இருக்கிறார். சசிகலாவிற்கு மீண்டும் ஆதரவு கொடுத்தால் அதை வரவேற்போம் அவர் மீண்டும் பரதனாவார் என்றும் கூறி ஓ. பன்னீர் செல்வத்திற்கு தூது விட்டுள்ளார் டிடிவி தினகரன்.
தியாகராய நகரில் சசிகலாவை சந்தித்த பிறகு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், சசிகலா தற்போது நலமுடன் இருக்கிறார் வரும் 24ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று வீட்டில் அவரின் படத்திற்கு மரியாதை செலுத்த உள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் பரதனாக இருந்த ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தவறான முடிவால் ராவணனுடன் சேர்ந்தார். தற்போது அவர் மனகசப்பில் இருக்கிறார். சசிகலாவிற்கு மீண்டும் ஆதரவு கொடுத்தால் அதை வரவேற்போம். அவர் மீண்டும் பரதனானார் என ஏற்றுக்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், அமமுகவை திமுகவின் பி டீம் என அமைச்சர் ஜெயகுமார் விமர்சிப்பதை கேட்கும்போது சிரிப்பு வருகிறது. மதுரையில் பொது இடத்தில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் சிலை திறக்க அனுமதி அளித்த அதிமுக எந்த அணி என கேள்வி எழுப்பினார்.
அதிமுகவில் ரசாயான மாற்றம் ஏற்பட்டுவருகிறது. அதனால் அமைச்சர்கள் அச்சத்தில் இதுபோன்று பேசுகிறார்கள் என குறிபிட்ட டி.டி.வி தினகரன் திமுகவைப் பார்த்தால் மக்கள் அச்சப்படுவதாகவும் ஒருபோதும் திமுக வெற்றி பெற வாய்ப்பு இல்லை எனவும் குறிப்பிட்டார்.
அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற பிறகு அதிமுகவை மீட்டெடுப்போம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி மூலம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்திற்கு நூல் விட்டு பார்க்கிறார் டிடிவி தினகரன். யாரை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினாரோ அவர்களின் அழைப்பை ஏற்று சசிகலா பக்கம் சாய்வாரா ஓ.பன்னீர் செல்வம்? அவர் மவுனம் கலைந்தால் மட்டுமே இதற்கு விடை கிடைக்கும்.