அடடே முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் சட்டென வடிந்த மழைநீர்.. சிங்கார சென்னை 2.o மாயாஜாலம்!
சென்னை: சென்னையில் கொளத்தூர் 70 அடி சாலையில் கடந்த முறை போன்று இந்த முறை மழை நீ்ர் தேங்கவில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் எந்த சிரமத்தையும் சந்திக்கவில்லை என கூறுகிறார்கள்.
சென்னையை பொருத்தவரை மழை என்பது மிகவும் முக்கியமானதாகும். இந்த வடகிழக்கு பருவமழைதான் வரும் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் வராமல் பாதுகாக்கும்.
பள்ளி , கல்லூரிகளுக்கு லீவு கிடைக்கும் என்பதை காட்டிலும் இந்த மழையால் சென்னையில் சாலைகளில் முழங்கால் அளவுக்கு, இடுப்பளவுக்கு எல்லாம் தண்ணீர் தேங்கும். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் தேங்கினால் அது வடிய தாமதமாகும்.

வடகிழக்கு பருவமழை
இதனாலேயே சென்னையில் வடகிழக்கு பருவமழை என்றால் தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு அலர்ஜியாக இருக்கும். வளர்ந்து வரும் பகுதிகளில் கூட ஆங்காங்கே மேடு பள்ளம் தெரியாமல் மழை நீர் தேங்கும். மழை காலங்களில் புதிய பகுதிகளுக்கு செல்வதே ஆபத்தானதுதான். எங்கே பள்ளம் இருக்கும் என தெரியாது.

மழை நீர் வடிகால் பள்ளங்கள்
இது போல் மழை நீர் வடிகால் பள்ளங்களில் விழுந்து பலர் உயிரிழந்திருக்கிறார்கள். தமிழகத்திலும் சென்னை மாநகராட்சியிலும் எந்த ஆட்சி வந்தாலும் சரி மக்களின் ஒரே கோரிக்கை மழை நீர் வடிகால்கள் அமைக்க வேண்டும் என்பதுதான். அந்த வகையில் கடந்த ஆண்டு பெய்த மிக கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

முதல்வர் ஸ்டாலின்
அப்போது முதல்வர் ஸ்டாலின் இரவு என்றும் பாராமல் ஆய்வு பணிளில் ஈடுபட்டிருந்தார். அடுத்த மழைக்குள் சென்னையில் தண்ணீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார். அதன்படி ஆங்காங்கே மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் தொடங்கின. இந்த நிலையில் சென்னையில் சில பகுதிகளில் மழை நீ்ர் வடிந்து விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

கனமழை
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதலே கனமழை பெய்து வருகிறது. காலையிலும் மழையானது வெளுத்து வாங்குகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கும் என நினைத்த மக்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சாலையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காமல் இருந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொளத்தூரில் 70 அடி சாலை
அதிலும் முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் உள்ள 70 அடி சாலையில் கடந்த முறை மழையால் சாலையே மூழ்கியது. ஆனால் இந்த முறை சிங்கார சென்னை 2.o திட்டத்தின் கீழ் புதிய வடிகால்கள் அமைக்கப்பட்டதால், கனமழை பெய்த போதிலும் தண்ணீரானது தேங்காமல் ஓடி கொண்டே இருக்கிறது. இதே போல் சென்னையின் ஓஎம்ஆர் பகுதி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை என கூறுகிறார்கள். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் சென்ற ஆண்டு வெள்ளம் தேங்கியிருந்த நிலையில் இந்த ஆண்டு இரவு பெய்த மழைக்கு தண்ணீர் தேங்கவில்லை என எம்எல்ஏ டாக்டர் எழிலன் படங்களை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications