ஆம்பன் சூப்பர் புயல்... மே. வங்கம்- வங்கதேசம் இடையே இன்று பிற்பகல் அதிதீவிர புயலாக கரையை கடக்கிறது
சென்னை: மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே இன்று பிற்பகல் முதல் மாலைக்குள் ஆம்பன் (Amphan) சூப்பர் புயல் வலுவிழந்து அதிதீவிரப் புயலாக கரையை கடக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த சனிக்கிழமை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. பின்னர் இது, புயலாக உருவெடுத்து, வடக்கு நோக்கி நகர்ந்தபடி உள்ளது.
இது மேலும் வலுவடைந்து சூப்பர் புயலாக மாறியது. அதாவது மணிக்கு 230 கி.மீ வேகத்தில் காற்று வீசும் அளவுக்கு வலுவான புயலை சூப்பர் புயல் என்பார்கள். புயல், அரபிக் கடலில் இருந்து குளிர்மையான காற்றை இழுக்கிறது. எனவே, தென் கர்நாடகா, வடக்கு கேரளா, வட தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பதிவானது.
இலவச மின்சாரத்தை தமிழக அரசு விட்டுக்கொடுக்க கூடாது... நெஞ்சுயர்த்தி நிற்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்
புயல் கரையை கடக்கும்
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: மேற்கு வங்கம்- வங்கதேசம் இடையே, ஆம்பன் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அது கூறியது. முன்னதாக, "ஆம்பன் இப்போது ஒரு 'சூப்பர் சூறாவளி' என்ற நிலைக்கு மாறியுள்ளது. இது ஒரு தீவிரமான புயலாகும், இந்த அளவுக்கு வலுவான ஒரே புயல் இதற்கு முன்பு ஒடிசாவில் 1999ம் ஆண்டு பதிவானது. அது மிகவும் ஆபத்தானது" என்று தேசிய பேரிடர் பதிலளிப்பு படை டி.ஜியான, எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இன்று மாலை நிலவரப்படி, ஆம்பன் சூப்பர் புயல் சற்று வலுவிழந்து அதிதீவிர புயலாக மாறியுள்ளது. கரையை நெருங்குவதால், புயலின் வேகம் குறைந்துள்ளதாம். இருப்பினும், இதுவும் லேசுப்பட்ட புயல் கிடையாது. ஒடிஷா, மேற்கு வங்க கடலோர மாவட்டங்களுக்கு மிக மிக அதிகமான கனமழை பெய்யும் என்று, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொல்கத்தா, ஹூக்ளி, ஹவுரா, தெற்கு-வடக்கு 24 பர்கானா, கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்படுமாம்.
மழை அளவு
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், சேலம் அணைக்கட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அரூர், காவேரிபாக்கம், பாப்பிரெட்டிப்பட்டியில் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணி நேரத்தில், கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். கடல் சீற்றத்தோடு இருக்கும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
முன்னெச்சரிக்கை
மேற்கு வங்க கடற்கரையிலிருந்து 650 கி.மீ தொலைவில் தற்போது ஆம்பன் புயல் நிலை கொண்டுள்ளது. மத்திய வங்கக் கடல், மேற்கு வங்கக் கடல் பகுதி கொந்தளிப்போடு காணப்படும். புயல் கரையை கடக்கும்போது அதன் பாதிப்பு மேற்கு வங்கம் மட்டுமின்றி, ஒடிசாவிலும் இருக்க கூடும் என்பதால், தேசிய பேரிடர் மீட்பு படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். பல லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.