ஹெவி ரெயின்.. 10 மாவட்டங்களில் இன்று வெளுக்க போகும் மழை.. 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என அறிவிப்பு
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது
சென்னை: சென்னை-வடக்கு கடலோர மாவட்டங்களை ஒட்டி, வளிமண்டல சுழற்சி உள்ளதால், 10 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது... அத்துடன் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூர் நகரமே, கனமழையில் தத்தளித்து வருகிறது.. கடந்த இரு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது..
மேலும், அடுத்த 2 நாட்களும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்திலும், கவலையிலும் உள்ளனர்.
இன்னும் சம்பவம் முடியல! பெங்களூரில் அடுத்த 2 நாட்கள் கனமழை! வானிலை மையம் வார்னிங்! மிரளும் மக்கள்
படகுகள்
பெங்களூருவில், கடந்த 34 வருடங்களில் கண்டிராத கனமழை பெய்ததால், சாலைகள், தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. பலகோடி ரூபாய் கொடுத்து வாங்கிய பிரமாண்டமான அடுக்குமாடி வீடுகளும் தண்ணீரில் மூழ்கின.... இதில் பாதிக்கப்பட்ட ஏராளமான பொதுமக்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர்மீட்பு துறை, காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் களத்தில் இறங்கினார். படகுகளிலும், ஜேசிபி மூலமும், டிராக்டர்கள் மூலம் அவர்களை மீட்டனர்.
திருவாரூர்
இந்நிலையிலும் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது... நேற்றுகூட திருவாரூரில், பலத்த மழை கொட்டியது.. இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குறுவை அறுவடை பணி நடந்து வரும் நிலையில், இந்த மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது.
சாரல் மழை
அதேபோல, விழுப்புரம் நகரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் சாரல்மழை பெய்யத்தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவிடாமல் 45 நிமிடத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது.. இதனிடையே, இன்று முதல் அடுத்த 12ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கோயம்பத்தூர், ஈரோடு, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
2 நாட்களுக்கு மழை
நாளை 9-ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.. நாளை 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.