கொஞ்ச நஞ்ச மழையில்லை... மிக மிக கனமழை பெய்யும் மக்களே - 4 நாளைக்கு மழை வச்சு செய்யுமாம்
தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தேனி, நீலகிரியில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று பல மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 14 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது. ஆரணி, மரக்காணம் பகுதிகளிலும் 11 செமீ மழை பதிவாகியுள்ளது. தியாகதுருகம் பகுதியில் 10 செமீ மழையும் பண்ருட்டி , அம்பத்தூரில் 9 செமீ மழையும் பதிவாகியள்ளது. மதுரை, கொரட்டூர், உள்ளிட்ட பல நகரங்களில் 7 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது.
விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் தமிழகத்தில் பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இந்த நிலையில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிக மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.

மிக கன மழை பெய்ய வாய்ப்பு
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புவியரசன், தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

இடி மின்னலுடன் மழை
தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தமிழகம் முழுவதும் மழை
ஜூலை 10,11 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு, திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை, தேனியில் கவனம்
ஜூலை 10 முதல் 12ஆம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலை பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாலும், மலைப்பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடும் என்பதனாலும் பொதுமக்கள் மலை ஏற்றத்தை தவிர்க்க வேண்டும் எனவும் புவியரசன் கூறியுள்ளார்.

மழை வச்சு செய்யும்
ஜூலை 12, 13ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேகமாக வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.

கடலுக்குள் செல்ல வேண்டாம்
இன்று முதல் 12ஆம் தேதி வரைக்கும் வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடலோர பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் ஆந்திரா கடலோர பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம். கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கும் வரும் 13ஆம் தேதி வரைக்கும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் புவியரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications