புயலோ சுழற்சியோ இல்லை.. ஆனாலும் பகலில் இவ்ளோ மழையா? வடசென்னைக்கு எக்ஸ்ட்ரீம்தான்!.. வெதர்மேன்!
சென்னை: தென்கிழக்கு சென்னையை மேகக் கூட்டங்கள் குழுமியுள்ளதாகவும் நேற்றை போல் மழை இருக்காது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை வந்த முதல் நாளே சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பின்னி பெடலெடுத்துவிட்டது என்றே சொல்லலாம். யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு முதல் நாளில் பெய்தது உண்மையில் அனைவருக்குமே ஆச்சரியம்தான்.
ஆனால் இதே போல் மற்ற நாட்களிலும் இருந்தால் என்ன செய்வது என்ற கவலையும் சென்னைவாசிகளை தொற்றிக் கொண்டது. அண்மைக்காலங்களில் சென்னைக்கு இந்த மழையானது நல்லதொரு வடகிழக்கு சீசன் தொடக்கம் என்றே சொல்லலாம்.

பகல் நேரம்
அந்த அளவுக்கு மழை பெய்தது. அதாவது "பகல் நேரத்தில் மழை என்பது புயலோ சுழற்சியோ இருந்தால்தான் சாத்தியம். ஆனால் இவை இரண்டுமே இல்லாமல் பகல் நேரத்தில் மிக கனமழை பெய்துள்ளது" என தமிழ் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்திருந்தார் தமிழ்நாடு வெதர்மேன். இதுகுறித்து அவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை அதாவது 36 மணி நேரத்தில் வடசென்னையில் 300 மி.மீ. மழை பெய்துள்ளது.

தென் சென்னை
அது போல் தென் சென்னையில் சராசரியாக 150 மி.மீ மழை பெய்துள்ளது. வடசென்னையில் ஓவர் நைட்டில் கனமழை பெய்தது. இதனால் வடசென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழையின் அளவு 100 -ஐ கடந்தது. அது போல் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடியில் 167 மி.மீ மழை பெய்துள்ளது.

36 மணி நேரத்தில் இவ்வளவா
பெரம்பூர், கத்திவாக்கம், திருவொற்றியூர், ராயபுரம், கொளத்தூர், மணலி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மத்திய சென்னையான நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், திநகர், ஆழ்வார்பேட்டை, மைலாப்பூர் ஆகிய பகுதிகளில் 36 மணி நேரத்தில் 150 முதல் 200 மி.மீ. மழை பெய்துள்ளது. தென் சென்னை பகுதிகளான அடையாறு, கிண்டி, பெருங்குடி ஆகிய பகுதிகளில் 36 மணி நேரத்தில் 100- 150 மி.மீ. மழை பெய்துள்ளது.

300 மி.மீ. ரொம்ப அதிக மழை
தென் கிழக்கு சென்னையில் மேக கூட்டங்கள் குழுமியுள்ளன. ஆனால் நேற்று பெய்தது போல் மழை இருக்காது. ஓரளவுக்கு மழை இருக்கும். 2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளில் பெய்த மழையின் அளவை ஒப்பிடும் போது இந்த ஆண்டு முதல் நாளே அதிகம்தான். அதிலும் 36 மணி நேரத்தில் வடசென்னையில் 300 மி.மீ. என்பதெல்லாம் ரொம்ப அதிகமாகும். இவ்வாறு பிரதீப் ஜான் தனது அடுத்தடுத்த பதிவுகளில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications