அந்த 6 பேர்தான்.. "வட்டம்" போட்டு காட்டிய ஓபிஎஸ்! அதிமுகவில் அடுத்து நடக்க போகும் 10 "சம்பவங்கள்"
சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் உச்சம் தொட்டுள்ளது. இன்று ஏவப்பட உள்ள பிஎஸ்எல்வி ராக்கெட்டை விட பல மடங்கு வேகத்தில் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன. நொடிக்கு நொடி அதிரடி. நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு என்று திரில்லர் படத்திற்கு இணையாக அதிமுகவில் மோதல் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.
Recommended Video
ஏதாவது செய்து ஒற்றை தலைமையை பெற்றுவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார். ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்த வேண்டும். அதில் பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்ற திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
அதிமுகவில் பொதுக்குழு நடக்க உள்ள ஜூலை 11ம் தேதிக்கு முன்பாக பின் வரும் 10 விஷயங்கள் கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவம் 1 - ஓபிஎஸ் மனு - தேர்தல் ஆணையம்
அதிமுக விவகாரம் உச்சம் பெற்றுள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு, தலைமைக்குழு விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு அளித்துள்ளார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இருக்கும் போது தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த வேறு யாருக்கும் அனுமதி இல்லை. எனவே நேற்று தலைமை கழக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் ஓபிஎஸ் மாற்றி மாற்றி பேசி வருகிறார் என்று இதற்கு எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் பதில் அளித்துள்ளார். இதில் தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 11ம் தேதிக்குள்.. எடப்பாடி கூட்டிய தலைமை கழக கூட்டம் சரியா, தவறா என்று தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவம் 2 - எடப்பாடி தரப்பு வழக்கு
இரண்டாவது சம்பவம்.. அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக நத்தம் விஸ்வநாதன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். எடப்பாடி ஆதரவாளர்கள் 10 பேர் கூட்டாக வழக்கு தொடுத்துள்ளனர். இது விரைவில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்.

சம்பவம் 3 - தீர்மானம் ஆதரவு எதிர்ப்பு
இந்த வழக்கில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும். புதிய தீர்மானத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் வழங்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் எடப்பாடி பொதுச்செயலாளர் ஆவது சிக்கலாகும். அதுவே தனித்தீர்மானம் கொண்டு வர தடை இல்லை என்று உரிமையியல் நீதிமன்றம் போல உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கினால் எடப்பாடி பொதுச்செயலாளர் ஆக அதிக வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டில் ஒன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நடக்கும். ஜூலை 11க்கு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது.

சம்பவம் 4 - ஓபிஎஸ் வழக்கு
இது போக இன்னொரு பக்கம் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அடுத்தப் பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது மன்னிக்க முடியாத செயல். இதனால் பொதுக்குழுவை தடை செய்ய வேண்டும் என்று அவர் தரப்பு வழக்கு தொடுத்துள்ளது. இதில் அவமதிப்பு வழக்கு திங்கள் கிழமை விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறியுள்ளார்.

சம்பவம் 5 - 6 பேர் மீது நடவடிக்கை
உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, அவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் மகன் உசேன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டுமென ஓபிஎஸ் ஆதரவாக சண்முகம் இந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த அவமதிப்பு வழக்குதான் திங்கள் கிழமை விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். அதிமுகவில் எடப்பாடிக்கு நெருக்கமாக இருக்கும் 6 பேரை வட்டம் போட்டு ஓபிஎஸ் தரப்பு செக் வைத்துள்ளது. இதில் உயர்நீதிமன்றம் திங்கள் கிழமை என்ன சொல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சம்பவம் 6 - தடை
இது போக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி சண்முகம் தாக்கல் செய்த மனு திங்கள் கிழமை விசாரணைக்கு வராது. மாறாக இதை பின்பு விசாரிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கு மிக முக்கியமானது ஆகும். ஏனென்றால் மொத்தமாக ஜூலை 11 நடக்க உள்ள பொதுக்குழுவிற்கு தடை கோரும் வழக்கு ஆகும் இது. இதில் உயர் நீதிமன்றம் இரண்டு தீர்ப்புகளை வழங்கலாம். ஒருங்கிணைப்பாளர்தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று கூறி பொதுக்குழுவை தடை செய்யலாம். இல்லையென்றால் ஒருங்கிணைப்பாளருக்கு ஆதரவு இல்லை என்று கூறி, பொதுக்குழுவை கூட்ட அனுமதிக்கலாம்.

சம்பவம் 7 - மேல்முறையீடு
இரண்டில் எது நடந்தாலும் வழக்கு கண்டிப்பாக உச்ச நீதிமன்றம் செல்லும். இது சிவில் வழக்கு ஆகும். உயர் நீதிமன்றம் முழுமையாக விசாரித்து தீர்ப்பு வழங்க ஒரு வாரமாவது குறைந்தபட்சம் ஆகும். அப்படியே உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு போனாலும் அங்கும் உடனே விசாரணை நடப்பது கஷ்டம். இதனால் வழக்கு கண்டிப்பாக நீண்ட சட்ட போராட்டத்தை நோக்கி செல்லும்.

சம்பவம் 8 - தள்ளிப்போகலாம்
இடைப்பட்ட காலத்தில் பொதுக்குழுவிற்கு இடைக்கால தடை கேட்க ஓபிஎஸ் தரப்பு முயற்சிக்கும். விசாரணை நடக்கும் வரை பொதுக்குழு கூட கூடாது என்று ஒபிஎஸ் தரப்பு கேட்கும். இதனால் பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடப்பது சந்தேகம் ஆகும். பொதுக்குழு பின்னர் உள்ள தேதிக்கு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

சம்பவம் 9 - இடைப்பட்ட மோதல்
இதற்கு இடையில் அதிமுகவில் நிர்வாகிகள் தாவல் கண்டிப்பாக நடக்கும் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ஓபிஎஸ் தரப்பில் இப்போது ஆட்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். வரும் நாட்களில் மேலும் எடப்பாடி கேம்பிற்கு பலர் தாவ வாய்ப்பு உள்ளது. ஓபிஎஸ் கேம்பில் இருந்து தென் மண்டல நிர்வாகிகள் பலர் வரும் நாட்களில், வழக்கு விசாரணைக்கு இடையில் எடப்பாடி கேம்பிற்கு தாவ வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

சம்பவம் 10 - மண்டபம் அறிவிப்பு
இந்த மோதல்களுக்கு இடையில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு விரைவில் எடப்பாடி தரப்பில் இருந்து கடிதம் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்பப்படும் என்கிறார்கள். அதோடு எங்கே விழா நடக்கிறது என்ற இடமும் தேர்வு செய்யப்படும். மேலும் விழாவிற்கான அனுமதியும் அரசு தரப்பில் அதிமுக சார்பாக விரைவில் கேட்கப்படும் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.












Click it and Unblock the Notifications