விடை கிடைக்காத 4 கேள்விகள்.. எடப்பாடிக்கு காத்திருக்கும் "பெரிய" பிரச்சனை.. ஓபிஎஸ்ஸின் லீகல் ஆயுதம்!
சென்னை: அதிமுகவில் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடக்கும் நிலையில் 4 கேள்விகளுக்கு மட்டும் இன்னும் பதில் கிடைக்கவில்லை. இந்த 4 விஷயங்களை பயன்படுத்தி ஓ பன்னீர்செல்வம் தரப்பு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்ட ரீதியாக போராட்டங்களை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
அதிமுகவில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இல்லாமல் கூட்டம் நடைபெற்றது. ஓ.பன்னீர் செல்வம் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர அவசரமாக கூட்டம் நடத்தப்பட்டது.
ஆனால் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் கூட்டத்தில் சில சீக்ரெட் விஷயங்கள் பேசப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஓபிஎஸ்சை நீக்குவது பற்றி அதிமுக முடிவா?..
ஜெயக்குமார் சொன்னது என்ன?
இன்று அதிமுக தலைமைக்குழு கூட்டத்திற்கு பின்பாக பேசிய ஜெயக்குமார்.. அதிமுக தலைமைக்குழு கூட்டத்தை கூட்ட தலைமைக்கழக செயலாளருக்கு அதிகாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இல்லாத நேரத்தில் தலைமை கழக செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தை கூட்டலாம். ஓ பன்னீர்செல்வம் விதி தெரியாமல் பேசுகிறார். அல்லது விதி தெரிந்தும் தெரியாதது போல பேசுகிறார் என்று ஜெயக்குமார் குற்றச்சாட்டு வைத்து இருந்தார்.
அறிக்கை
ஆனால் நேற்று இரவு ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி நாளை அதிமுக அலுவலகத்தில் நடைபெறவுள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று ஓபிஎஸ் தரப்பு பதில் அறிக்கை வெளியிட்டது. அவர் வெளியிட்ட அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட, திட்ட விதி 20A(v)-ன்கீழ் கழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாக பொறுப்புகள் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது., என்று குறிப்பிட்டார்.
கேள்வி 1 - தலைமைக்கழக நிர்வாகிகளுக்கு என்ன தகுதி இருக்கிறது?
இந்த நிலையில் அதிமுக விதியில் என்ன இருக்கிறது.. பொதுக்குழு, தலைமைக்கழக கூட்டங்களை அழைக்க யாருக்கு அதிகாரம் இருக்கிறது அதிமுக தரப்பு சட்ட வல்லுனர்களிடன் ஆலோசனை மேற்கொண்டோம். அவர்கள் கொடுத்த தகவலின்படி.. இன்று தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டதே விதிமீறல் என்கிறார்கள். அதாவது ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் இல்லாத பட்சத்தில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்ட அதிமுக தலைமை கழக செயலாளர்(எடப்பாடி) அழைக்கலாம். ஆனால் இப்போது ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் இருக்கிறார்கள் . அப்படி இருக்கும் போது.. ஓபிஎஸ் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
கேள்வி 2 - தேர்தல் கமிஷனில் என்ன இருக்கிறது?
தேர்தல் ஆணைய ஆவணங்களில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளருக்கு கூட்டங்களை கூட்ட, அழைப்பு விடுக்க அதிகாரம் கொடுத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை மீறி இன்று எப்படி அதிமுக தலைமை கழக கூட்டம் நடத்தப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் இவருக்குமே இப்போது கூட்டத்தை கூட்ட அதிகாரம் உள்ளது. . தேர்தல் ஆணைய ஆவணங்களில் இதுதான் உள்ளது. எனவே ஓபிஎஸ் அனுமதி இன்று எப்படி கூட்டம் நடத்தப்பட்டது எப்படி.. ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கேள்வி 3 - கட்சியில் எந்த பாடியும் இல்லை
இன்னொரு பக்கம் ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை கூட்ட அவை தலைவர் தமிழ் மகன் உசேன் அழைப்பு விடுத்தது எப்படி என்று கேள்வி எழுந்தது. இதற்கு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் இருவருக்கு மட்டுமே அதிகாரமே உள்ளது. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் முடிவிற்கு பொதுக்குழு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி பொதுக்குழுவை கூட்டுகிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், சட்டப்படி ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் முடிவிற்கு ஒப்புதல் வழங்காத போதே, பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான ஒப்புதலும் நிராகரிக்கப்படுகிறது. அதாவது பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகளும் காலியாகிறது. எனவே பொதுக்குழு "பாடியே" சட்டப்படி இப்போது இல்லை. அப்படி இருக்கும் போது.. பேப்பரில் இல்லாத பொதுக்குழு உறுப்பினர்கள் எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கேள்வி 4 - யார் கூட்டுவார்கள்? எதை கூட்டுவார்கள்?
பொதுக்குழு உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் முடிவிற்கு ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில்.. பொதுக்குழுவை கூட்டும் அதிகாரத்தை அவைத்தலைவருக்கு யார் கொடுத்தது? இந்த கூட்டத்தில் யார் கலந்து கொள்வார்கள்? பொதுக்குழு உறுப்பினர்கள் பதவி காலாவதியாகிவிடும் நிலையில் எப்படி இவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எடப்பாடிக்கு எதிராக திரும்பும்
அதிமுகவில் இந்த 4 கேள்விகள் எடப்பாடிக்கு எதிராக திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் முறையாக பொதுக்குழுவை கூட்டாத பட்சத்தில் இந்த கூட்டம் நடப்பதே சிக்கலாகிறது. இந்த 4 விஷயங்களை பயன்படுத்தி ஓ பன்னீர்செல்வம் தரப்பு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்ட ரீதியாக போராட்டங்களை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை எடப்பாடி எப்படி எதிர்கொள்ள போகிறார்.. எப்படி சட்ட ரீதியாக பிரச்னையை தீர்க்க போகிறார் என்பதை பொறுத்தே அதிமுகவில் அடுத்தகட்ட நிகழ்வுகள் நடக்கும்!