போனை கூட எடுக்கல! எடப்பாடியை டென்ஷனாக்கிய 6 "சம்பவங்கள்".. திகிலில் ஓபிஎஸ்! கூட்டத்தில் நடந்தது என்ன
சென்னை: திடீரென இன்று ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின் 6 முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video
அதிமுக தலைமையகத்தில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில் இன்று தலைமை கழக நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற்றது. தலைமை நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்ட கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் உட்பட 5 நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. 77 தலைமை கழக நிர்வாகிகளில் 5 பேர் மட்டுமே வரவில்லை.
பண்ட்ருட்டி ராமசந்திரன், திண்டுக்கல் சீனிவாசன், முத்து சந்திரன், ஜஸ்டிஸ் செல்வராஜ் ஆகியோர் இன்று தலைமைக் கழக கூட்டத்திற்கு வரவில்லை. இவர்களுக்கு உடல்நிலை சரியில்லை. வராத இன்னொருவர் ஓ பன்னீர்செல்வம்.

கோபம்
ஓ பன்னீர்செல்வம் மீது எடப்பாடி தரப்பு கடும் கோபத்தில் இருந்தே நிலையில்தான் இந்த கூட்டம் நடைபெற்றது என்று கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வத்திற்கு மொத்தமாக கால் கட்டு போட வேண்டும்.. அவருக்கு பின் யாரும் அணி சேர கூடாது என்ற திட்டத்தில்தான் இந்த கூட்டத்தை நடத்தி இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2 வாரங்களில் நடைபெற்ற 6 சம்பவங்கள் எடப்பாடி தரப்பை டென்ஷானாக்கி உள்ளதாம். அதை தொடர்ந்தே இன்று அவசர அவசரமாக ஓபிஎஸ் இல்லாமல் கூட்டம் நடத்தப்பட்டதாம்... அந்த 6 சம்பவங்கள் என்னென்ன... எடப்பாடி கோபமாக இருப்பது ஏன் என்று பார்க்கலாம்!

சமாதானம் முடியவில்லை
சம்பவம் 1 - அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆகிறார் என்பது உறுதியான போதே முடிந்த வரை ஓ பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்ய எடப்பாடி தரப்பு முயன்றது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த பேச்சு அடிபட்ட போதே ஓபிஎஸ்ஸை சமாதானம் செய்ய பல்வேறு தூதுகள் அவரின் வீட்டிற்கு எடப்பாடி சார்பாக அனுப்பப்பட்டது. கிட்டத்தட்ட 2 டஜன் மீட்டிங்குகள் ஓபிஎஸ் வீட்டில் நடத்தப்பட்டது. ஓபிஎஸ் மீது ஆக்சன் எடுக்காமல் சமாதானமாக செல்லவே முதல் முயற்சி எடுக்கப்பட்டது. எடப்பாடி எவ்வளவோ முயன்றும் ஓபிஎஸ் எடப்பாடிக்கு முன்பு போல அடிபணியவில்லை.

போனை கூட எடுக்கவில்லை..
சம்பவம் 2 - அதிமுகவில் தொடர்ந்து ஓபிஎஸ்சுடன் பேச்சுவார்த்தை செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஓபிஎஸ் இந்த முறை விட்டுக்கொடுப்பதாக இல்லை. எப்போதும் இறங்கி வரும் ஓபிஎஸ் இந்த முறை.. ஒற்றை தலைமை பற்றி பேசி என் வீட்டிற்கே வர வேண்டாம் என்றும் கூறினார். என் வீட்டிற்கு இதற்காக யாரும் சமாதானம் செய்ய வர வேண்டாம் என்று கூறினார். இவரின் போன் எடப்பாடி ஆதரவலர்களுக்கு தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றது. அவரிடம் பேச்சுவார்த்தை எடுபடாத நிலையில் இப்போது அவருக்கு எதிராக ஆக்சன் எடுக்கும் எண்ணத்தில் எடப்பாடி தரப்பு உள்ளது.

சட்ட ரீதியாக போராட்டம்
சம்பவம் 3 - இதெல்லாம் போக சட்ட ரீதியாக எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் குதித்தார். பொதுக்குழுவிற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு, அதன்பின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு, நடுஇரவில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு ஓபிஎஸ் கடுமையான சட்ட போராட்டம் செய்து, அதில் ஒற்றை தலைமை தீர்மானத்திற்கு எதிராக தீர்ப்பும் வந்தது. இது எடப்பாடி தரப்பை மேலும் அப்செட் ஆக்கியது. ஓபிஎஸ் தரப்பிற்கு எதிராக எடப்பாடி மொத்த்தமாக கோபம் கொள்ள இது காரணமாக இருந்தது.

விதிகளை கூறி எஸ்கேப்
சம்பவம் 4 - அதோடு விதிகளை கூறி தொடர்ந்து ஓபிஎஸ் எஸ்கேப் ஆகி வருகிறார். நான்தான் ஒருங்கிணைப்பாளர். அதனால் நீங்கள் பொதுக்குழுவை கூட்ட முடியாது. என் அனுமதி இன்றி தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது என்று பல்வேறு விதிகளை கூறி வருகிறார். இதனால் கட்சி விதிகளை அவர் பயன்படுத்தாத வண்ணம், பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடத்தி அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திடீர் டெல்லி பயணம்
சம்பவம் 5 - திடீரென ஓபிஎஸ் டெல்லி சென்றதையும் எடப்பாடி தரப்பு சுத்தமாக விரும்பவில்லையாம். தேவையின்றி இதில் பாஜகவை கொண்டு வர அவர் முயல்கிறார். ஆனால் இதற்கெல்லாம் நாங்கள் அடிபணிய மாட்டோம். பாஜகவை கண்டிப்பாக உள்ளே அனுமதிக்க மாட்டோம். அவருக்குத்தான் நேற்று காவி துண்டு போடப்பட்டது. பாஜகவில் வேண்டுமானால் அவர் ஐக்கியம் ஆகட்டும் என்று எடப்பாடி தரப்பு கோபமாக கூறியுள்ளதாம். இதுவும் கூட இன்று கூட்டம் நடக்க காரணம் என்கிறார்கள்.

தென் மண்டல பயணம் - ஆதரவு
சம்பவம் 6- கடைசியாக.. தென் மண்டலத்திற்கு ஓபிஎஸ் பயணம் மேற்கொண்டதையும் அவர் விரும்பவில்லையாம். ஓபிஎஸ் கட்சியை இரண்டாக பிரிக்க பார்க்கிறார். சசிகலாவுடன் சேர்ந்து கலகம் செய்ய பார்க்கிறார். அவர் கட்சியில் இருந்தால் அதிமுக வலுவிழந்துவிடும் என்று எடப்பாடி தரப்பு நினைக்கிறதாம். இதன் காரணமாகவே அவருக்கு எதிராக முடிவு எடுப்பது தொடர்பாக இன்று அவசர ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளதாம். இந்த 6 விஷயங்கள்தான் அவசர கூட்டம் நடக்க காரணம் என்கிறார்கள்.

கூட்டத்தில் நடந்தது என்ன ?
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பரம ரகசியம் என்று ஜெயக்குமார் கூறி இருக்கிறார். அது என்ன ரகசியம் என்று ஜெயக்குமார் சொல்லாத நிலையில், இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் விசாரித்ததில், ஓபிஎஸ்சை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்குவது பற்றி கூட்டத்தில் ஆலோசனை செய்துள்ளனர். ஆனால் முடிவு எடுக்கப்படவில்லை. இந்த கூட்டம் ஓபிஎஸ்ஸுக்கு அனுப்பட்ட மெசேஜ். அவர் எடப்பாடி வழிக்கு வரவில்லை என்றால் கண்டிப்பாக பொதுக்குழு அன்று ஜூலை 11ல் நீக்கப்படுவார் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள், என்று அதிமுக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது பந்து ஓபிஎஸ் தரப்பிற்கு சென்றுள்ளது.. அவர் இதை எப்படி அடிக்க போகிறார் என்பதை பொறுத்தே அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications