அடி தூள்! ஓசூரில் இறங்கும் ரோல்ஸ் ராய்ஸ்.. தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் 8 நிறுவனங்கள் என்னென்ன?
சென்னை: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் ஏரோ எஞ்சின் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் 8 முன்னணி நிறுவனங்கள் பற்றிய விவரம் இங்கே..
தமிழ்நாடு, தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னணி மாநிலமாக இருந்து வருகிறது. உலகளாவிய நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் புதிதாக 8 தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய தமிழ்நாடு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.7,108 கோடி முதலீட்டில் 22,536 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவையில் தொகுப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் மின்வாகன பாகங்கள், காலணி உற்பத்தி, விண்வெளி பாதுகாப்பு, கண்ணாடி பொருட்கள், ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறையில் முதலீடுகளை செய்ய உள்ளன. தமிழக அரசு அனுமதி அளித்துள்ள 8 முன்னணி நிறுவனங்களின் லிஸ்ட்டை பார்க்கலாம்.
செயின்ட்கோபைன்: செயிண்ட் - கோபைன் நிறுவனம், கட்டுமான துறை, கண்ணாடி தயாரிப்பில் உலகளாவிய அளவில் முன்னணியில் உள்ளது. இந்த கட்டுமான மற்றும் தொழில்துறை சந்தைகளுக்கான பொருட்கள் மற்றும் கண்ணாடி சார்ந்த பொருட்களை தயாரித்து விநியோகிக்கிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் தொழில்சாலை தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர், பெருந்துறை மற்றும் திருவள்ளூரில் அமையவுள்ளது.
ஹாங்ஃபு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் சிப்காட்டில் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசு, தைவானைச் சேர்ந்த ஹாங் ஃபூ குழுமத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த தொழிற்சாலை அமைந்தால் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கோடிஸ் நிறுவனம்: அக்கோடிஸ் ஒரு உலகளாவிய டிஜிட்டல் பொறியியல் நிறுவனம். இந்நிறுவனம் ஸ்மார்ட் இண்டஸ்ட்ரி துறையில் முன்னணியில் உள்ளது. சுவிட்சர்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Adecco குழுமத்தின் ஒரு பகுதியான Akkodis, உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரும் தொழில் நிறுவனங்களுக்கு சேவை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்கிறது.
சியோன் இ-ஹ்வா: ஆட்டோமொபைல் உதிரிபாகங்களின் உற்பத்தியாளர் நிறுவனமான Seoyon E-Hwa, ஆடி, நிசான், கியா, ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட முன்னணி கார் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை தயாரித்து அளிக்கிறது. இந்நிறுவனத்தின் கிளை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ்+ ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் : இன்டர்நேஷனல் ஏரோஸ்பேஸ் மேனுஃபேக்சரிங் பிரைவேட் லிமிடெட் ஓசூரில் தொழிற்சாலை அமைக்க உள்ளது. அதாவது, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உடன் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இணைந்து, ஏரோஸ்பேஸ் எஞ்சின் பாகங்கள் தயாரிக்க உள்ளது.
சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ்: ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது. இரும்பரப்பள்ளியில் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனமான மைலான் லெபாரட்டரீஸ் நிறுவனம் முதலீடு செய்கிறது. ஒசூரில் ஐகால் டெக்னாலஜிஸ் நிறுவனம் முதலீடு செய்கிறது.












Click it and Unblock the Notifications