இதுதான் முக்கியம்.. எந்தெந்த ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்.. வெளியான அறிவிப்பு
என்னென்ன ஆவணங்களை கொண்டு ஓட்டுப்போடலாம்
சென்னை: இன்னும் சற்று நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடங்க உள்ளது.. இந்த தேர்தலில் எந்தெந்த ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.
தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்து பிரச்சார நிகழ்ச்சிகளும், வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ள வேண்டும் என்பதால், தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

கடைசி ஒரு மணி நேரம்
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி இன்று மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. கடைசி ஒரு மணி நேரம் மட்டும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செயப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள், வரும் 22ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 218 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், 12 ஆயிரத்து 607 பதவிகளுக்கு, 57 ஆயிரத்து 778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வாக்குச்சீட்டு
இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்கப்படவுள்ளதால், அதற்கான பாதுகாப்பு பணிகள் தயார் நிலையில் உள்ளது.. இந்த தேர்தலில், எந்தெந்த ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.. அதன்படி, பூத் சிலிப் எனப்படும் வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்களும், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆவணங்கள்
அந்த ஆவணங்கள் என்னென்னவென்றால், ஆதார் அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு அட்டைகள், மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு உள்ளிட்டவை வாக்களிக்க தகுதியான ஆவணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் பதிவீட்டின் கீழ் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்டவற்றை காண்பித்தும் வாக்களிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள்
இதைதவிர, மத்திய மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி அடையாள அட்டைகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications