"ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்" அதிமுக மாநாட்டில் தண்ணீர் முதல் டாஸ்மாக் வரை சொதப்பல்! ரர.க்கள் கவலை
சென்னை: மதுரை மாநாட்டின் போது உணவு பிரச்சினை இருந்தாலும் அதை காட்டிலும் சில பிரச்சினைகள் இருந்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
அதிமுக வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு என்ற பெயரில் மதுரையில் கடந்த 20ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநாடு நடந்தது. காலை தொடங்கிய இந்த மாநாட்டின் நிகழ்ச்சிகள், இரவு 8 மணிக்கு எடப்பாடி பழனிசாமி உரையுடன் நடந்து முடிந்தது.

மாநாட்டில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமானோர் குவிந்தனர், பேருந்துகள், லாரிகள், கார்களில் அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். சுமார் 40 ஆயிரம் வாகனங்களில் 15 லட்சம் தொண்டர்கள் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த மாநாட்டிற்கு தடைவிதிக்கக் கோரி நடத்தப்பட்ட வழக்கில் அதிமுகவுக்கு ஆதரவாக தீர்ப்புகிடைத்தது. இப்படியாக பல்வேறு தடைகளை தாண்டி இந்த மாநாட்டிற்கு முந்தைய நாளான சனிக்கிழமையே உணவு தயாரிப்பு பணிகள் தொடங்கின. இந்த உணவு தொடங்கி என்னென்ன பிரச்சினைகள் வெடித்தன என்பதை பார்ப்போம்.
முதல் பிரச்சினையாக போக்குவரத்து நெரிசல்: காலையிலேயே மாநாட்டில் இடம் பிடிப்பதற்காக ஏராளமானோர் வாகனங்களில் அணிவகுத்து வந்தனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அது போல் ஆகஸ்ட் 20 தேதி ஆவணி பிறந்த முதல் முகூர்த்தம் என்பதால் அன்றைய தினம் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும் வாகனங்களும் மக்களும் கூடினர். இதனால் மேலும் நெரிசல் ஏற்பட்டது. விரகனூர் டூ மாநாடு இடம் வரை 15 கிமீ. தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தன. அடுத்ததாக மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு குளுகோஸ் வழங்கிய அதிமுக நிர்வாகிகள் சரியாக தண்ணீரை வழங்கவில்லை என்கிறார்கள்.
15 லட்சம் பேர் கூடினர் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அப்படியிருக்கும் போது அடிப்படை வசதிகளான தண்ணீருக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். வாட்டர் பாட்டில்களில் வாங்கப்பட்ட தண்ணீரும் தீர்ந்துவிட்டது. தண்ணீர் இல்லாமல் வாட்டர் பாட்டிலை மட்டும் வைத்திருந்து என்ன செய்வது என்பதால் ஆங்காங்கே குவியல் குவியலாக போட்டுவிட்டனர்.
மாநாட்டில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு கூட வழிவிடவில்லை என்ற குற்றச்சாட்டிருந்தது. மாநாடு தொடங்குவதற்கு சில நாட்ளுக்கு முன்பே மதுரையில் பெரும்பாலான இடங்களில் ஆபத்தான வகையில் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தியும் புகார் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மாநாட்டின் காரணமாக அந்த பகுதியை சுற்றியிருந்த டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் மக்கள் முகம் சுளிக்கும் விதமாக இருந்தது. இது போன்ற அசம்பாவிதங்களை இனி வரும் காலங்களிலாவது தவிர்க்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இப்படி அடிப்படை பிரச்சினைகளான உணவு, தண்ணீர் சரிவர வழங்காத நிலையில் அதிமுக நிர்வாகிகளோ மாநாடு வரலாற்று சிறப்பு வாய்ந்த அளவுக்கு நடந்ததாக கூறுவதாக தொண்டர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications