தமிழகத்தில் 5வது சர்வதேச ஏர்போர்ட்டை ஓசூரில் அறிவித்த ஸ்டாலின்.. அப்போ மற்ற நான்கு எவை தெரியுமா?
சென்னை: அதிகரிக்கும் தேவையைக் கருத்தில் கொண்டு ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார். இது தமிழ்நாட்டில் அமையும் 5ஆவது சர்வதேச விமான நிலையமாக இருக்கும். இப்போது தமிழகத்தில் இருக்கும் மற்ற 4 சர்வதேச ஏர்போர்ட் குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ்நாடு சட்டசபை இன்று கூடிய நிலையில், அப்போது முதல்வர் ஸ்டாலின் விதி 110-ன் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கியமானது ஓசூர் சர்வதேச விமான நிலையம்.

அங்கே இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இது தமிழகத்தில் 5வது விமான நிலையமாக இருக்கும். இங்கு மாநிலத்தில் உள்ள மற்ற 4 சர்வதேச விமான நிலையங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
சென்னை ஏர்போர்ட்: சென்னையில் உள்ள மிகப் பெரிய மற்றும் பிஸியான ஏர்போர்ட் என்றால் அது மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை விமான நிலையமாகும் . இங்கு இப்போது மூன்று முனையங்கள் உள்ளன. சென்னையில் கடந்தாண்டு தான் ஒருங்கிணைந்த முனையமும் திறக்கப்பட்டது. உள்நாட்டில் 43 ரூட்களில் விமானச் சேவை சென்னை ஏர்போர்டில் இருந்து இருக்கிறது.
அதேபோல பிரிட்டன், சவுதி, மலேசியா உட்பட 17 நாடுகளுக்கு நேரடி விமானச் சேவையையும் சென்னை கொண்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, லட்சத்தீவு மற்றும் புதுச்சேரியை உள்ளிட்ட பகுதிகளைக் கவனிக்கும் தென்னிந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைமையகமாகச் சென்னை விமான நிலையம் உள்ளது.
சென்னையில் இருந்து இண்டிகோ, ஏர் இந்தியா, எமிரேட்ஸ் உட்பட 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் விமானங்களை இயங்குகின்றன. சென்னையில் இருந்து நேரடியாக லண்டனுக்குச் செல்லும் விமானம் தான் இங்கிருந்து இயக்கப்படும் நீண்ட தூர விமானமாகும். சென்னையில் புறப்படும் இந்த விமானம் 11.30 மணி நேரம் பயணித்து சென்னை ஏர்போர்ட் சென்றடையும்.
கோவை விமான நிலையம்: சென்னைக்கு அடுத்து தமிழகத்தில் முக்கியமான ஏர்போர்ட் என்றால் அது கோவை ஏர்போர்ட் தான். கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள இந்த ஏர்போர்ட்டில் பயணிகள் சேவைக்குத் தனி முனையம்.. சரக்கு சேவைக்குத் தனி முனையம் என்று இரண்டு முனையங்கள் உள்ளன. நாட்டில் 19வது பிஸியான ஏற்போர்ட்டாக இது இருக்கிறது.
கடந்த 2012 அக்டோபர் 2ஆம் தேதி இந்த ஏர்போர்ட்டிற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டது. உள்நாட்டில் கோவையில் இருந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகம் என்றாலும் கோவை ஏர்போர்ட்டை பயன்படுத்தும் சர்வதேச பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. கோவையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தான் இங்கு இருந்து இயக்கப்படும் நீண்ட தூர விமானமாகும். கோவை ஏர்போர்ட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அதற்கேற்ப விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளும் தொடங்கப்பட இருக்கிறது.
திருச்சி சர்வதேச ஏர்போர்ட்: அடுத்து லிஸ்டில் வருவது திருச்சி சர்வதேச விமான நிலையம்.. இரண்டு முனையங்களைக் கொண்டுள்ள இந்த திருச்சி ஏர்போர்ட்டிற்கு கடந்த 2012ஆம் ஆண்டு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து கிடைத்தது. தமிழகத்தில் உள்ள 3ஆவது பிஸியான ஏர்போர்ட் ஆன திருச்சியில் இருந்து 8 நாடுகளுக்கு நேரடியாக விமானச் சேவை இருக்கிறது. உள்நாட்டில் 5 ரூட்களில் விமானச் சேவை இருக்கிறது.
திருச்சியைப் பொறுத்தவரை உள்நாட்டு விமானச் சேவையைக் காட்டிலும் வெளிநாட்டிற்குச் செல்ல விமானங்களைப் பயன்படுத்துவோரே அதிகம். அதிலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இங்கிருந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகம். திருச்சியில் இருந்து இயக்கப்படும் நீண்ட தூர விமானம் என்றால் அது குவைத் வரை இயக்கப்படும் ஏர் இந்தியா விமானமாகும்.
மதுரையில் இருக்கும் ட்விஸ்ட்: தமிழகத்தில் உள்ள நான்காவது முக்கியமான ஏர்போர்ட் மதுரை. இது சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் இப்போதும் கூட சிங்கப்பூர், இலங்கை, ஐக்கிய அமீரகம் என 3 நாடுகளுக்கு 8 ரூட்களில் விமானச் சேவை இருக்கிறது. மதுரை விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக அறிவித்தால் மட்டுமே அங்கிருந்து இயக்கப்படும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்க முடியும் என்பதால் இதைப் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இப்போதே இந்தியாவில் உபி-க்கு அடுத்து அதிக சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது. இந்தச் சூழலில் தான் அதிகரிக்கும் தேவையைக் கருத்தில் கொண்டு ஓசூரில் 5ஆவது சர்வதேச விமான நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications