காங்கிரஸா? எந்த நம்பிக்கையில் எடப்பாடி அப்படி சொன்னார்! குறுக்கே வந்த "டிடிவி".. அப்போ நாம் தமிழர்?
சென்னை: 2024 லோக்சபா தேர்தலுக்கு மெகா கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக அவரின் மெகா கூட்டணியில் இரண்டு முக்கியமான கட்சிகள் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடக்க இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு மேல் இருக்கிறது. ஆனாலும் இப்போதே கட்சிகள் இதற்கான வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டன.
முக்கியமாக பாஜக இப்போதே பூத் ரீதியாக பணிகளை செய்ய தொடங்கிவிட்டது. அடுத்த 60 நாட்களுக்கு பாஜக பூத் வாரியாக கூட்டங்களை நடத்தி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய உள்ளது.

மெகா கூட்டணி
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி அமைத்து 2024 தேர்தலை சந்திப்போம் என்று கூறி உள்ளார். 2024 லோக்சபா தேர்தலுக்கு மெகா கூட்டணி அமைப்போம். அதிமுக தலைமையில் இந்த கூட்டணி செயல்படும். திமுகவை வீழ்த்துவதற்கு இந்த மெகா கூட்டணி உதவியாக இருக்கும். அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். எடப்பாடியின் இந்த மெகா கூட்டணி அறிவிப்பை பாஜக தலைவர் அண்ணாமலை முதல் ஆளாக வரவேற்று உள்ளார்.

திமுக கூட்டணி கட்சிகள்
இந்த நிலையில்தான் அதிமுகவின் மெகா கூட்டணியில் இணைய போகும் கட்சிகள் யார் யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏனென்றால் திமுக கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது. ஐஜேகே தவிர திமுக கூட்டணியில் இருந்த எல்லா கட்சிகளும் திமுகவுடன் நட்பாகத்தான் இருக்கிறது. வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக அரசை பற்றி சில விமர்சனங்களை வைத்தாலும் அரசுடன் அவர் நெருக்கமாகவே இருக்கிறார். சிபிஎம், சிபிஐ சில விமர்சனங்களை வைத்தாலும் அவர்களும் நட்பாகவே இருக்கிறார்கள்.

காங்கிரஸா?
சில நாட்களுக்கு முன்பு வரை காங்கிரஸ் - அதிமுக கூட்டணி உருவாக போவதாக செய்திகள் வந்தன. எடப்பாடி பழனிசாமி ராகுலுடன் போனில் பேசியதாக செய்திகள் வந்தன. பேரறிவாளன் விடுதலை காரணமாக இதற்கான வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால், அதன்பின் ராகுல் காந்தியும் - ஸ்டாலினும் பாரத் ஜோடோ யாத்திரை தொடக்க விழாவில் நட்பாக பேசினார்கள். அதேபோல் இப்போது பாஜகவும் முதல் ஆளாக அதிமுகவின் மெகா கூட்டணியில் இடம் பிடித்து உள்ளது.

தினகரன் வருவாரா?
இதனால் காங்கிரஸ் - அதிமுக கூட்டணிக்கும் வாய்ப்பே இல்லாத சூழல்தான் ஏற்பட்டு உள்ளது. டிடிவி தினகரன் மட்டும்தான் அண்ணாமலையை தவிர்த்து மெகா கூட்டணிக்கு ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஆனால் அவர் எடப்பாடியுடன் சுமுகமாக செல்வது எல்லாம் கஷ்டமான காரியம். இவர்களை எல்லாம் விட்டால் நாம் தமிழர் மட்டுமே இருக்கிறது. ஆனால் நாம் தமிழர் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்காது.

நாம் தமிழர்
தொடக்கத்தில் இருந்தே அந்த கட்சி தனித்துதான் போட்டியிட்டு வருகிறது. இந்த நிலையில் யாரை நம்பி எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி என்று அறிவித்தார். பாமக, பாஜகவை மட்டும் நம்பி மெகா கூட்டணி என்று கூறினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது திமுகவில் இருக்கும் கட்சிகளுடன் அவர் பேசி வருகிறாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. அதிமுக தலைமையில் நிலையற்ற தன்மை நிலவும் போது எத்தனை கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டுவார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.












Click it and Unblock the Notifications