செஸ் ஒலிம்பியாட்! பிரதமர் மோடி வருகையை ஒட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் என்னென்ன? முழு தகவல்
சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிலையில், சென்னையில் சில போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
நாட்டிலேயே முதல்முறையாகச் சென்னை மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும். இந்தப் போட்டிகள் அனைத்தும் நேரலையிலும் ஒளிபரப்பப்பட உள்ளது.

செஸ் ஒலிம்பியாட்
மாமல்லபுரத்தில் நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் சுமார் 187 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். சர்வதேச வீரர், வீராங்கனைகள் ஏற்கனவே சென்னைக்கு வரத் தொடங்கிவிட்டனர். வெளிநாட்டு வீரர்கள் தங்க ஏதுவாக மாமல்லபுரத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும், போட்டி நடைபெறும் இடமும் போலீசார் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி
செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழா 28ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ள நிலையில், அவரது வருகையை முன்னிட்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்கிடையே பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான சென்னை போலீசார் செய்திக் குறிப்பை வெளியிட்டு உள்ளனர்.

சென்னை போலீசார்
அந்த செய்திக்குறிப்பில், "44வது உலகச் சதுரங்கப் போட்டியின் துவக்க விழா சென்னை பெரியமேடு இராஜா முத்தைய்யா சாலையில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் 28.07.2022 மாலை நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர், தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு முதலமைச்சர். மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், பல்வேறு நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். எனவே சென்னைப் பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறையின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அனுமதிக்கப்படாது
இருப்பினும் 28.07.2022 நண்பகல் முதல் இரவு 21.00 மணிவரையில் இராஜா முத்தைய்யாச் சாலை, ஈவெரா பெரியார் சாலை, மத்தியச் சதுக்கம், அண்ணாசாலை (ஸ்பென்சர் சந்திப்பு வரை) மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தேவை ஏற்படின் டிமலஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் இராஜா முத்தையச் சாலை வழியாக அனுமதிக்கப்படமாட்டாது.

ஈவெகி சம்பத் சாலை
அதுபோன்றே ஈவெகி சம்பத் சாலை ஜெர்மயா சாலைச் சந்திப்பிலிருந்து இராஜா முத்தையாச் சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. வணிக நோக்கிலான வாகனங்கள் ஈவெரா சாலை கெங்குரெட்டிச் சாலைச் சந்திப்பு. நாயர் பாலச் சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

பிராட்வே
அதுபோன்றே பிராட்வேயிலிருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கசாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்றுத் தங்கள் வழித்தடங்களை அடையலாம். எனவே வாகன ஓட்டிகள் மேற்கண்ட சாலை வழித்தடங்களைத் தவிர்த்துப் பிற வழித்தடங்களைப் பயன்படுத்தக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய ரயில் நிலையத்திற்கு வரவேண்டிய பொதுமக்கள் அவர்களதுப் பயணத்திட்டத்தினை முன்கூட்டியேத் திட்டமிட்டுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications