திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சு திருப்திகரமாக இருந்தது.. சிரித்த முகத்துடன் வந்த காங். தலைவர்கள்!
சென்னை: திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது என இன்று நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும், பாஜக ஒரு அணியாகவும் களத்தில் இறங்குகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று பிற்பகலில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார் ஆகியோர் இன்று சென்னை வந்தனர். நேராக சத்திய மூர்த்தி பவனுக்கு சென்ற அவர்கள், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் அங்கிருந்து அண்ணா அறிவாலயம் சென்றனர். அண்ணா அறிவாலயத்தில், திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினருடன், காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். திமுக தரப்பில் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், திருச்சி சிவா ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
காங்கிரஸ் தரப்பில் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை, முகுல் வாஸ்னிக், அஜோய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த தேர்தலில் வென்ற 9 தொகுதிகளுடன் கூடுதலாக 3 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 12 தொகுதிகளை ஒதுக்க திமுகவிடம் காங்கிரஸ் கட்சியினர் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு காங்கிரஸ் மேலிட தலைவர் முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி, "திமுகவுடனான முதல் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. திமுகவிடம் தொகுதி பட்டியல் எதையும் வழங்கவில்லை. அதிமுக, பாஜகவை எதிர்கொள்வது குறித்து ஆலோசித்தோம்" எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் மேலிட தலைவர் முகுல் வாஸ்னிக் பேசுகையில், "இந்தியா கூட்டணியில் இந்திய மக்கள் இருப்பதால் இந்தக் கூட்டணி வலிமையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக உடனான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை நிறைவாக அமைந்தது. கூடிய விரைவில் அடுத்த கட்டப் பேச்சு வார்த்தை நடைபெறும். தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை பெறுவது எப்படி என விவாதித்தோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications