நீண்ட விசாரணை முடிந்து.. பொன்முடி கிளம்பும் நேரத்தில்.. அமலாக்கத்துறை சொன்ன வார்த்தை! விடாது கருப்பு
சென்னை: நேற்று அமலாக்கத்துறையின் இரண்டாம் கட்ட விசாரணையில் அமைச்சர் பொன்முடி ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
நேற்று முதல்நாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்கத்துறை மூலம் ரெய்டு நடத்தப்பட்டது.காலை 7 மணிக்கு தொடங்கிய ரெய்டு இரவு 12 மணி வரை தொடர்ந்தது. இன்னொரு பக்கம் 9 மணி அளவில் ரெய்டுக்கு இடையே பொன்முடி விசாரணை நடத்தப்படுவதற்காக அழைத்து செல்லப்பட்டார்.

கைது செய்யப்பட்டார் என்று கருதப்பட்ட நிலையில் அவரை விசாரணை செய்வதற்காக என்று மட்டும் அமலாக்கத்துறையினர் அழைத்து சென்றனர். இந்த ரெய்டுக்கான அதிகாரபூர்வ காரணத்தை அமலாக்கத்துறை சொல்லவில்லை என்றாலும் பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் இந்த ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது. கருப்பு பணத்தை வெள்ளையாக்கியதன் கீழ் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி பொன்முடி மகன் கவுதம சிகாமணி செய்த முதலீடு ஒன்றுதான் ரெய்டுக்கு காரணம் என்கிறார்கள். இவர் ஆர்பிஐ ஒப்புதல் இன்றி இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் முதலீடு செய்துள்ளார். அங்கே இருக்கும் பிடி எக்செல் மெகிண்டோ என்னும் நிறுவனத்தில் கடந்த 2008ல் முதலீடு செய்துள்ளார்.
சுமார் 1 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு பங்குகளை இவர் வாங்கியதாக கூறப்படுகிறது. இதில் கருப்பு பணத்தை அவர் வெள்ளையாக்கியதாக அமலாக்கத்துறை சந்தேகம் கொண்டுள்ளதாம். இதற்கான ஆதாரங்கள் அடிப்படையில்தான் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் விதமாக 55 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அவர் முதலீடு செய்ததாகவும் புகார் வைக்கப்பட்டு உள்ளது.
இதில் அமைச்சராக அப்போது இருந்த பொன்முடிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் கீழ் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் ரெய்டு முடிந்ததும் அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை.
இது தொடர்பாக மொத்தம் 7 மணி நேரம் அவரிடம் அமலாக்கத்துறை விடிய விடிய விசாரணை செய்துள்ளது. விடாமல் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர். இதில் பொன்முடி எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. பல்வேறு முக்கிய பண பரிமாற்றங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணையில் கேள்வி எழுப்பப்பட்டது. அவரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
அதன்பின் நேற்று மாலை 4 மணிக்கு மீண்டும் அவர் ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டது. அதன்படி பொன்முடி மீண்டும் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார். இந்த முறை அவரிடம் 100 கேள்விகள் கேட்கப்பட்டது. ஆம். - இல்லை என்று பதில் அளிக்கும் விதமாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. 6 மணி நேரம் இதற்காக விசாரணை நடந்தது.
10 மணி வரை விசாரணை நடந்தது. இதையடுத்து நேற்று அமலாக்கத்துறையின் இரண்டாம் கட்ட விசாரணை முடிந்து அமைச்சர் பொன்முடி வெளியேறும் போது அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள்.. நீங்கள் கைது செய்யப்படவில்லை. இரண்டு நாட்களும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளீர்கள். இதே ஒத்துழைப்பு எங்களுக்கு தரப்பட வேண்டும்.
உங்களை விசாரணைக்கு மீண்டும் அழைப்போம். இதற்காக சம்மன் கொடுப்போம். அந்த சம்மனை வாங்கியவுடன் விசாரணைக்கு மீண்டும் ஆஜராக வேண்டும், விசாரணையை தட்டி கழித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது. இதனால் பொன்முடிக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்புமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications