Flashback: “முரசொலி செல்வம் இல்லை என்றால் நான் காலிப்பையனாக போயிருப்பேன்”.. அமைச்சர் துரைமுருகன்
சென்னை: முரசொலி செல்வம், மூத்த அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினராக அரை நூற்றாண்டு காலத்தைக் கடந்தவருமான துரைமுருகனின் கல்லூரி கால நண்பர். அதன் வாயிலாகவே முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானார் துரைமுருகன். முரசொலி செல்வம் இல்லை என்றால் நான் காலிப்பையனாக போயிருப்பேன் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகனும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சகோதரரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் இன்று காலமானார். திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் 50 ஆண்டு காலத்துக்கும் மேல் பணியாற்றி வந்தார் முரசொலி செல்வம். அதன் நிர்வாக ஆசிரியராகவும் செயல்பட்டு வந்தார்.

பெங்களூரில் தங்கி இருந்த முரசொலி செல்வம் இன்று காலையில் அடுத்த கட்டுரைக்கான குறிப்புகளை எடுத்து வைத்துவிட்டு, சிறிது ஓய்வு எடுத்த நேரத்தில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அவரது மறைவு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூரில் இருந்து அவரது உடல், இன்று பிற்பகல் சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முரசொலி செல்வம், மூத்த அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினராக அரை நூற்றாண்டு காலத்தைக் கடந்தவருமான திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் கல்லூரி கால நண்பர். அந்த நெருக்கமான நட்பு மூலமாகவே, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானார் துரைமுருகன். முரசொலி செல்வம் பற்றி பல மேடைகளில் நன்றி கூர்ந்து பேசி உள்ளார் அமைச்சர் துரைமுருகன்.
கடந்த ஆகஸ்ட் மாதம், வேலூர் காட்பாடியில் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் துரைமுருகன், "முரசொலி செல்வமும், விசுவநாதனும் இல்லை என்றால் நான் காலிப்பையனாக போயிருப்பேன். என்னை செதுக்கியவர்கள் இவர்கள்." எனப் பேசினார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபையில் துரைமுருகன் அரை நூற்றாண்டை நிறைவு செய்ததை பாராட்டி கொண்டு வரப்பட்ட சிறப்புத் தீர்மானத்துக்கு பதில் அளித்து பேசிய துரைமுருகன், "ஸ்டாலின் கொஞ்சம் அழுத்தமானவர் என்று கலைஞர் சொல்வார். அவர் என்னிடம் காட்டிய பாசத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போயுள்ளேன். கல்லூரியில் முரசொலி செல்வம் என் நண்பனாக இருந்தார், மாணவனாக இருந்தபோதே என்னை நண்பனாக நடத்தியவர் கலைஞர்." எனப் பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications