சினிமாவை மிஞ்சும் கள்ளக்காதல் கதை.. பல துண்டுகளாக கணவன் உடல்.. சமையலறையில் புதைத்த பெண்
சென்னை: மலையாளத்தில் கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான 'திரிஷியம்' திரைப்படம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன், கௌதமி நடித்திருந்தார்கள். இந்த படத்தில் மகளின் அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்யும் இளைஞரை கமல்ஹாசன் கொன்று புதைப்பார். அதேபோல் குஜராத்தில் பெண் ஒருவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக்கொன்று சமையலறையில் புதைத்துள்ளார்.
இன்றைக்கு கள்ளக்காதல் மிகப்பெரிய பிரச்சனையாக சமூகத்தில் உருவெடுத்துள்ளது. பிறரது மனைவி மீது ஆசை கொண்டு சிலர் தவறான வழிகளில் செயல்படுகிறார்கள். அதேபோல் சில பெண்கள் பிறரது கணவன் மீது ஆசை கொண்டு எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்கள், ஒரு கட்டத்தில் கணவனை காலி செய்துவிடுகிறார்கள். அப்படியான ஒரு சம்பவம் சினிமா பாணியில் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் பீகாரை சேர்ந்த சமிர் அன்சாரி என்ற கொத்தனார் தனது காதல் மனைவி ரூபியுடன் கடந்த 2016-ம் ஆண்டு குடியேறி உள்ளார். பிழைப்பு தேடி பீகாரில் இருந்து குஜராத்திற்கு தஞ்சம் புகுந்த தம்பதி, அங்கு கட்டிட வேலை செய்து நிரந்தரமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.
சமிர் அன்சாரியை கடந்த சில மாதங்களாக எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அது குறித்து போலீசிலும் எந்த புகாரும் மனைவி தரவில்லை. கணவர் குறித்து ரூபியிடம் அக்கம்பக்கத்தினர் கேட்டபோது, அன்சாரி வேறு பகுதிக்கு வேலைக்கு சென்றிருப்பதாக கூறியிருக்கிறார். சில மாதங்களில் அவரும் குழந்தைகளுடன் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.
ஆனால் அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். எனவே இதுகுறித்து போலீசார் ரகசியமாக விசாரித்து வந்தார்கள். அப்போது ரூபிக்கும், அப்பகுதியை சேர்ந்த இம்ரான் வகேலா என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. எனவே இம்ரானைப் பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
தனக்கு எதுவும் தெரியாது என்று இம்ரான் கச்சிதமாக நடித்துள்ளார். ஆனால் போலீசாரின் தங்கள் பாணி விசாரணையை தீவிரப்படுத்திய உடன், ரூபியுடன் சேர்ந்து சமிர் அன்சாரியை கொலை செய்ததாக கூறினார். இம்ரான் வகேலாவுடனான கள்ளக்காதல் விவகாரம் அன்சாரிக்கு ஒரு கட்டத்தில் தெரிந்துவிட்டதாம். இதனால் அவர் தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார்.
இதனால் சமிர் அன்சாரி உயிருடன் இருந்தால், தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறு ஏற்படும் என கருதிய ரூபி, தனது கணவனை கொலை செய்ய திட்டமிட்டாராம். அவரது திட்டப்படி சமிர் அன்சாரி தனது உறவினர் 2 பேருடன் சேர்ந்து சமிர் அன்சாரியை கழுத்தை அறுத்து கொலை செய்தார்களாம்.
பின்னர் சமிர் அன்சாரியின் உடலை துண்டுகளாக வெட்டி, அவரது வீட்டு சமையலறையிலேயே குழி தோண்டி புதைத்துள்ளார்களாம். பின்னர் அதை மூடி சிமெண்டு மற்றும் டைல்ஸ் போட்டு தளம் போட்டிருக்கிறார்களாம். மனதை உறைய வைக்கும் இந்த சம்பவம் ஓராண்டுக்கு முன்பே நடந்துள்ளதாம். இந்த தகவல்கள் அனைத்தையும் இம்ரான் வகேலா, போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் சமிர் அன்சாரியின் வீட்டின் சமையலறையில் இருந்து அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இம்ரானை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய ரூபி மற்றும் இம்ரானின் உறவினர்கள் 2 பேரையும் தேடி வருகின்றனர். திரைப்பட பட பாணியில் நடந்துள்ள இந்த பயங்கர சம்பவம் அஹமதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications