நியூஸ் வந்துருக்கு! தனிப்பட்ட வகையில் வலி, அவமானம்.. இருக்கட்டும்! முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
சென்னை: நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ரவி இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்காத நிலையில் இன்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் நீட் மசோதா பற்றி பேசினார்.
Recommended Video
நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர். என் ரவி ஒப்புதல் அளிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ஆளுநர் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக இந்த அறிவிப்பு வெளியாகவில்லை. பல்வேறு ஊடகங்களில் இது தொடர்பாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே தமிழ்நாடு அரசு நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி ஆளுநர் ஆர். என் ரவிக்கு அனுப்பியது. ஆனால் அதை ஆளுநர் ஆர். என் ரவி ஏற்காத நிலையில் மீண்டும் திமுக சார்பாக நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.

நீட் மசோதா
இந்த மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காத நிலையில் இன்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் நீட் மசோதா பற்றி பேசினார். அதில் ஆளுநர் பதவிக்கு உண்டான மரியாதையை, மதிப்பை நாங்கள் வழங்குவோம். வாங்கிக்கொண்டு இருக்கிறோம். இது அரசியல் கடந்த பண்பாடு. இந்த பண்பாட்டை நாம் எந்த நிலையிலும் காக்க வேண்டும். தனிப்பட்ட வகைளில் எனக்கு கிடைக்க வேண்டிய பாராட்டு முக்கியம் இல்லை. தமிழ்நாடு மக்களுக்கு கிடைக்க வேண்டிய பாராட்டுதான் முக்கியம்.

சட்டசபை
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். ஆளுநர் அப்படி செய்யாதது இந்த அவையின் மாண்பிற்கு எதிரானது. மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. நான் இந்த அவையில் சொல்ல விரும்புவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.. நான் எத்தனையே வலிகளையம் அவமானங்களையும் சந்தித்து வந்து இருக்கிறேன். அது எனக்கு பொருட்டல்ல. இந்த 50 ஆண்டுகால பொது வாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்தது எல்லாம்.. வலிகளையும், அவமானங்களையும், புகழ்ச்சிகளையும் புறந்தள்ளிவிட்டு செயல்பட வேண்டியதுதான்.

வலிகள், இகழ்ச்சிகள்
முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி எனக்கு கற்றுக்கொடுத்தது இதுதான். தனிப்பட்ட வகையில் எனக்கு கிடைக்கும் அவமானம், இகழ்ச்சிகளை பொறுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறேன். அதனால் ஏதாவது மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்றால் புகழ்ச்சி மற்றும் பாராட்டுகளை புறந்தள்ளிவிட்டு செயல்படுகிறேன். மக்களுக்கு அதனால் நல்லது ஏற்பட்டால் சரி. தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வுதான் நீட் விலக்கு.

இதுதான் முக்கியம்
அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதுதான் முக்கியம். அதற்கான முயற்சிகளை நான் செய்வேன். தமிழ்நாடு முதல்வராக நான் அதை செய்து கொண்டே இருப்பேன். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை எல்லா மந்திரங்களுக்கும் எடுத்து செல்வோம். நீட் மசோதாவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி 70 நாட்கள் ஆகின்றன. இந்த நிலையில் ஆளுநர் தற்போது நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப போவதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

நியூஸ் வந்துருக்கு
இதை பற்றி ஆலோசிக்க உள்ளேன். அது தொடர்பான நடவடிக்கைகளை ஆராய்வேன். குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை அனுப்பினால் அதை பற்றி ஆராய்வோம். தேவைப்பட்டால் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும். அடுத்து என்ன செய்வது என்று ஆலோசனை செய்யப்படும், என்று முதல்வர் ஸ்டாலின் தனது சட்டசபை உரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications