ஜனாதிபதி ஆட்சியா? விஜய் உள்பட தவெகவின் 107 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தால் என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில திமுகவும், அதிமுகவும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் உரிமை கோரினால் தவெகவின் விஜய் உள்பட 107 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒருவேளை தவெகவின் விஜய் உள்பட 108 பேரும் ராஜினாமா செய்தால் என்ன நடக்கும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

தமிழகத்தில் ஆட்சியை பிடித்து முதல்வராக வேண்டும் என்றால் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் தற்போது விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் மட்டுமே ஜெயித்துள்ளது. இதில் விஜய் 2 தொகுதிகளில் வென்றுள்ளார். இதனால் 107 எம்எல்கள் தான் உள்ளனர்.

தவெகவினருடன் காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களும் இப்போது சேர்ந்துள்ளனர். இதனால் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அனுமதி வழங்கவில்லை.

tvk vijay resign

இதனால் விஜய் திணறி வருகிறார். ஆளுநருக்கு எதிராக நீதிமன்றத்தை நாடலாமா? என்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பொதுவாக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சி ஆட்சியமைக்க தேவையான மெஜாரிட்டியை நிரூபிக்காவிட்டால் அதற்கு அடுத்ததாக 2வது பெரிய கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில் அந்த கட்சியால் ஆட்சி அமைக்க முடியும்.

தவெகவினர் ராஜினாமா மிரட்டல்

இந்நிலையில் தான் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்காதபோது திமுகவும் - அதிமுகவும் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்த வியூகம் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த 2 கட்சிகளின் கூட்டணிக்கும் தற்போது 121 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் எளிதாக அவர்களால் ஆட்சி அமைக்க முடியும்.

இதனால் தவெக கலங்கிப்போய் உள்ளது. இந்நிலையில் தான் அதிமுக - திமுக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினால் விஜய் உள்பட 108 தொகுதிகளில் வென்ற வேட்பாளர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படி தவெகவினர் மொத்தமாக ராஜினாமா செய்தால் என்ன நடக்கும்? ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்படுமா? என்பது பற்றி பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி இங்கே பார்க்கலாம்.

முதல் விஷயம்

108 தவெக எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தால் இது பெரிய விஷயமாக இருக்கும். ஏனென்றால் இவ்வளவு எம்எல்ஏக்கள் இந்திய வரலாற்றில் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்தது இல்லை. இதற்கு முன்பு கடந்த 2018 ல் கர்நாடகாவில் பாஜகவிற்கு ஆதரவு வழங்குவதற்காக காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணியில் இருந்த 13 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 ஜேடிஎஸ் எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தனர். அதன்பிறகு கடந்த 2023ம் ஆண்டில் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையேயான அதிகார மோதலில் 81 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். அதன்பிறகு அவர்கள் ராஜினாமாவை திரும்ப பெற்றனர். இதனால் 108 தவெக எம்எல்ஏக்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்வது என்பது பெரிய விஷயமாக மாறும்.

2வது விஷயம்

பொதுவாக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யும்போது சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோரிடம் தான் கடிதம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது சட்டசபை கலைக்கப்பட்டுள்ளது. புதிய சட்டசபை இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால் தவெகவினர் ராஜினாமா செய்தால் அவர்கள் ஆளுநரிடம் தான் ராஜினாமா கடிதத்தை வழங்க வேண்டும். அதோடு தேர்தலில் வென்ற இவர்கள் எம்எல்ஏவாக பதவியேற்காமலே ராஜினாமா செய்த நபர்கள் என்ற பெயருக்கு சொந்தக்காரர்களாக மாறுவார்கள்.

3வது விஷயம்

தமிழகத்தில் மொத்தம் 234 சட்டபை தொகுதிகள் உள்ளன. இதனால் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 234 ஆக உள்ளது. அதில் 108 பேர் ராஜினாமா செய்யும்போது எம்எல்கே்களின் எண்ணிக்கை 126 ஆக குறையும். இது ஆங்கிலத்தில் Constitutional Crisis என்பார்கள். அதாவது அரசியலமைப்புக்கான நெருக்கடி நிலை என்பார்கள். மேலும் 234 எம்எல்ஏக்கள் இருக்கும்போது மெஜாரிட்டி 118 ஆக இருக்கும். ஆனால் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 126 குறையும்போது மெஜாரிட்டி நம்பர் 64 எம்எல்ஏக்களாக குறையும்.

இது திமுக அல்லது அதிமுகவிற்கு சாதகமாகவும் அல்லது இருவரும் கூட்டணி அமைத்தால் அதில் குழப்பத்தையும் ஏற்படுத்தலாம். அதாவது மெஜாரிட்டி 64 எனும்போது திமுக தனது 59 எம்எல்ஏக்கள் + 2 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் + 2 இந்திய கம்யூனிஸ்ட் + 2 விசிக + 2 ஐயூஎம்எல் + ஒரு தேமுதிக ஆதரவில் ஆட்சியை கைப்பற்ற நினைக்கலாம். இது அதிமுகவால் தேர்தலி்ல களமிறங்கிய கூட்டணிக்கு மெஜாரிட்டி இருக்காது. இதனால் தேர்தலுக்கு பிந்தைய திமுக + அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்படலாம்.

4வது விஷயம்

108 எம்எல்ஏக்களும் ராஜினாமாவும் ஏற்கும்பட்சத்தில் அந்த தொகுதிகளில் அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது நிதிச்சுமையை ஏற்படுத்தும். மேலும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசும் பொருளாகும். அதிமுக - திமுக மற்றும் ஆளுநருக்கு எதிராக தவெகவினர் குற்றச்சாட்டுகளை எளிதில் வைக்க முடியும். அதுமட்டுமின்றி தவெகவினருககு பதவி ஆசை ஒன்றும் தங்களுக்கு இல்லை என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க வாய்ப்பாக அமையும்.

5வது விஷயம்

ஒருவேளை அதிமுக - திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்க முயலும்போது தவெகவின் 108 பேரும் ராஜினாமா செய்தால் அது இருகட்சிகளுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இதனால் அவர்கள் ஆட்சி அமைக்கும் முயற்சியை கைவிடலாம். இதன்மூலம் ஆட்சியை பிடிக்க யாரும் இல்லாத நிலை வரும். அப்போது ஆளுநர், ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்யலாம்.
அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவின் கீழ் ஆளுநர் பரிந்துரையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமலுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது. ஜனாதிபதி ஆட்சி வந்தால் சட்டசபை தற்காலிகமாக முடக்கப்படும். இதனால் இதுபோன்ற விஷயங்களுக்கு வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+