உச்சக்கட்ட டென்ஷன்.. தமிழ்நாடு முழுதும் இன்று மறைமுக தேர்தல்.. வெடித்த வன்முறை.. கல்வீச்சு.. பதட்டம்
அன்னவாசலில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேர்வில் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது.. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளதில், அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.. அதேபோல உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கல்வீச்சு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 21 மாநகராட்சிக்கான மேயர் மற்றும் துணை மேயர் பதவி, 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது.
இதற்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வார்டு கவுன்சிலர்கள் மறைமுக வாக்களித்தனர்.

பெட்ரோல் வெடிகுண்டு
இந்த சூழலில் திருத்துறைபூண்டி நகர்மன்ற துணைத்தலைவர் பதவிக்கு ராமலோக ஈஸ்வரி எனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டார். நகராட்சி துணைத்தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற இருந்த நிலையில், திருத்துறைப்பூண்டி நகராட்சியின் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ராமலோக ஈஸ்வரி வீட்டின் மீது மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. நகர மன்றத் துணைத் தலைவராக போட்டியிடும் வேட்பாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வன்முறை
இன்று நகர்மன்ற, பேரூராட்சி மன்ற தலைவர்களுக்கான தேர்தல் நடக்க உள்ள நிலையில், பெரும் வன்முறை தமிழகத்தின் மாவட்டங்களில் நடந்து வருகிறது.. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் இன்று நகர்மன்ற, பேரூராட்சி மன்ற தலைவர்களுக்கான தேர்தல் நடக்கிறது.

விஜயபாஸ்கர்
இந்த மாவட்டத்தில் இரண்டு நகராட்சிகளும், 7 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதியில் உள்ள அன்னவாசல் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. அதனால் அங்கு கவுன்சிலர்கள் கடத்தப்படலாம் என்று கடந்த சில நாட்களாகவே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரிடம் புகார் மனு கொடுத்து இருந்த நிலையில், தொடர்ந்து நீதிமன்றத்தையும் நாடி பாதுகாப்பு கேட்டு மனு செய்திருந்தார்.

கவுன்சிலர்கள்
காலை 7 மணிக்கெல்லாம் அதிமுகவைச் சேர்ந்த 9 கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்... திமுகவைச் சேர்ந்த ஒருசில கவுன்சிலர்களும் உள்ளே சென்றனர். இதைத்தொடர்ந்து அலுவலகத்தைச் சுற்றிலும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினரும், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் திமுகவினரும் திரண்டனர். 2 கட்சிகளைச் சேர்ந்தோரும் அராஜகத்தில் ஈடுபடுவதாக ஒருவரையொருவர் மாறி, மாறி குற்றம் சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், பேரூராட்சி அலுவலக வாசலில் வைக்கப்பட்ட பேரிகார்டுகளைக் கடந்து திமுகவினர் அலுவலகத்துக்குள் செல்ல திமுகவினர் முயற்சித்தனர்.

தடியடி
தேர்தலில் அதிமுகவினர் - திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் இரு தரப்பு மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிருப்தி
அதேபோல, கடலூர் மாநகராட்சியில் உள்ள மொத்த 45 இடங்களில் 30 இடங்களைக் கைப்பற்றியது திமுக. கடலூரின் முதல் பெண் மேயராக கவுன்சிலர் கீதா தேர்வு செய்யப்படுவார் என திமுகவினர் எதிர்பார்த்தனர்... ஆனால் கடலூர் மேயர் வேட்பாளராக சுந்தரி ராஜாவை அறிவித்தது திமுக தலைமை... எனவே, திமுக கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்தனர்... அதேபோல், துணை மேயர் பதவியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், தனது கட்சிக்காக திமுக தலைமையிடம் கேட்டிருந்தார். அதை மறுத்து, துணை மேயர் பதவியை விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கி விட்டது திமுக தலைமை. இதனாலும் கடலூர் திமுகவில் அதிருப்திகள் வெடித்தபடி இருந்தன.

குணசேகரன்
இந்நிலையில், கவுன்சிலர் கீதாவின் கணவரும், மாவட்ட பொருளாளருமான குணசேகரன், திமுக கவுன்சிலர்கள் 30 பேரில் 23 பேரை இரவோடு இரவாக பாண்டிச்சேரிக்கு கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.. இந்த சம்பவம் கடலூர் திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்று நடக்கும் மேயர் தேர்தலில் சுந்தரி ராஜாவை ஆதரித்து கவுன்சிலர்கள் வாக்களிப்பார்களா? அல்லது கீதா குணசேகரன் போட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டு அவரை ஆதரிப்பார்களா? என்கிற பரபரப்பும் கடலூர் திமுகவில் அதிகரித்துள்ளது.

மதுரை
அதேபோல, மதுரை திருமங்கலம் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 27 கவுன்சிலர்களில் 13 கவுன்சிலர்கள் மட்டுமே இருந்ததால் தேர்தல் அதிகாரி தேர்தலை ஒத்திவைத்துள்ளார்.. இன்னும் பல்வேறு மாவட்டங்களில் கலவரங்கள், வன்முறைகள் வெடித்து வருவதால் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications