ம்ஹூம்.. "அதிகபட்சம் 4 தொகுதிகள்தான்!" கறார் காட்டிய திமுக! அப்செட் ஆன காங்கிரஸ்! வெளியான பரபர தகவல்
சென்னை: திமுக உடனான முதற்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைக் காங்கிரஸ் முடித்துள்ள நிலையில், உள்ளே என்ன தான் நடந்தது என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேசியளவில் பார்க்கும் போது பாஜகவின் என்டிஏ அணியும், எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணிக்கு இடையே தான் போட்டி.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக கூட்டணி இடையே தான் நேரடி போட்டி இருக்கும். இப்போது "இந்தியா" கூட்டணி வலுவாகவே இருக்கிறது. கடந்த 2019 மக்களவை தேர்தல் முதலே இந்தக் கூட்டணி தொடர்ந்து ஒன்றாகவே பயணித்து வருகிறது.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: இதற்கிடையே திமுக கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சியான காங்கிரஸ் உடன் இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக நடத்தியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது.. எந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்காக டெல்லி காங்கிரஸில் இருந்து முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார் ஆகியோர் சென்னை வந்தனர்.
இன்று டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர்கள் முதலில் சத்தியமூர்த்தி பவனுக்கு சென்று.. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து அண்ணா அறிவாலயம் சென்ற அவர்கள் திமுக தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முதலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளைக் கொண்ட லிஸ்ட்டை திமுகவிடம் வழங்கியதாகத் தகவல் வெளியானது. இருப்பினும், அந்த தகவலைக் காங்கிரஸ் தரப்பே மறுத்தது.
உள்ளே என்ன நடந்தது: கடந்த முறை காங்கிரஸ் 9 தொகுதிகளில் வென்ற நிலையில், அதை விடக் கூடுதலான இடங்களைக் காங்கிரஸ் கேட்டதாகத் தகவல்கள் வெளியானது. இதற்கிடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திமுகவுடனான முதல் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகத் தெரிவித்தார்.
ஆனால், உள்ளே நடந்த நடந்த பேச்சுவார்த்தை என்பது காங்கிரஸ் கட்சிக்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் அதிகபட்சம் 4 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 சீட்டுகள் மட்டுமே தரப்படும் என திமுக தரப்பில் சொல்லப்பட்டு உள்ளது.
அதிகபட்சம் 6 தான்: இதைச் சற்றும் எதிர்பாராத காங்கிரஸ் மீண்டும் பேசுவோம் எனச் சொல்லிவிட்டு எழுந்து வந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உள்ளே நடந்த பேச்சுவார்த்தை என்பது காங்கிரஸ் கட்சிக்குச் சுமுகமாக இல்லை என்றே தெரிகிறது. டெல்லி காங்கிரஸ் தலைமையுடன் தொடர்பு கொண்ட பிறகு காங்கிரஸ் தனது மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடரும் எனத் தெரிகிறது.
காங்கிரஸுக்கு அதிகபட்சம் 6 சீட் மட்டுமே தர திமுக முடிவு செய்துள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகிறது.. இன்று நடந்த பேச்சுவார்த்தையிலும் கூட கிட்டதட்ட அதே பாணியில்தான் திமுக பேசியுள்ளது. எனவே, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது 6 சீட் உறுதியாகலாம்!












Click it and Unblock the Notifications