Youtuber Murder: "நீ சம்பாதிச்சா நான் ஏன் கடன் வாங்குறேன்?" சென்னை நங்கநல்லூர் பெண் கொலையில் நடந்தது என்ன?
சென்னை: சென்னை நங்கநல்லூரில் யூடியூப்பில் தொழில் தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு வந்த பெண் யூடியூபர், அவரது கணவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்.
சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகரில் வசித்து வந்தவர் சுப்பிரமணி (51). இவரது மனைவி நாகலட்சுமி (41). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ரஷ்யாவிலும், இளைய மகன் சைலேஷ் சென்னையிலும் மருத்துவப் படிப்பு படித்து வருகின்றனர்.

நேற்று காலை சைலேஷ் கல்லூரிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியபோது, தனது தாய் நாகலட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதையும், தந்தை சுப்பிரமணி தூக்கில் தொங்கியிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
நாகலட்சுமி பட்டுப்புடவை கடை நடத்தி வந்தார். தனது தொழில் வளர்ச்சிக்காக அவர் யூடியூப்பில் (YouTube) தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இதற்கிடையே, நாகலட்சுமியின் நடத்தையில் சுப்பிரமணிக்குத் தீவிர சந்தேகம் இருந்து வந்துள்ளது. அவர் யாரிடம் பேசினாலும் சுப்பிரமணி சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், தொழில் நிமித்தமாக வாங்கிய கடன்களும் இவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தம்பதியினருக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு மதுரைக்குச் சென்றிருந்த சுப்பிரமணி, கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் சென்னை திரும்பி மனைவியுடன் வாழத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று மீண்டும் நாகலட்சுமிக்கும் சுப்பிரமணிக்கும் இடையே தகராறு நடந்ததாம்.
அப்போது, சுப்பிரமணி, "தொழில் செய்வதாக கூறி இவ்வளவு கடனை வைத்திருக்கிறாயே" என கடிந்து கொண்டாராம். அதற்கு நாகலட்சுமி, "நீங்கள் ஒழுங்காக வேலைக்குச் சென்று 4 காசு சம்பாதித்திருந்தால் நான் ஏன் கடன் வாங்க போகிறேன்" என கேட்டாராம்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதையடுத்து கடைக்கு சென்ற சுப்பிரமணி, புதிதாக அரிவாள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார். அப்போது நாகலட்சுமியை வெட்டினார். இதனால் பல இடங்களில் வெட்டு வாங்கிய நாகலட்சுமி சரிந்து விழுந்து இறந்தார். இதையடுத்து சுப்பிரமணி மற்றொரு அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆதம்பாக்கம் போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இது குடும்பத் தகராறால் நடந்த கொலை மற்றும் தற்கொலை எனத் தெரிந்தாலும், வீட்டின் கதவு திறந்திருந்ததால் இதில் மூன்றாம் நபர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மருத்துவப் படிப்பு படிக்கும் இரு மகன்களின் வாழ்க்கை இச்சம்பவத்தால் கேள்விக்குறியாகி இருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications