புட்டுப் புட்டு வைத்த CCTV வீடியோ: ஆளுநர் மாளிகை முன் நடந்தது என்ன? கருக்கா வினோத்தை பிடித்தது யார்?
சென்னை: கும்பலாக வந்த விஷமிகள் பெட்ரோல் குண்டு வீசியதாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்ட நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டபோதான சிசிடிவி வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீச முயன்றுள்ளார். பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிக்க முயன்ற கருக்கா வினோத்தை போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அதில், சில விஷமிகள், பெட்ரோல் குண்டுகளுடன் ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவாயில் 1 வழியாக ராஜ் பவனுக்குள் நுழைய முயன்றனர். ஆளுநர் மாளிகை பாதுகாப்பு காவலர்கள் அவர்களைத் தடுத்தனர். அப்போது ஒரு பெட்ரோல் குண்டை பிரதான நுழைவாயில் பகுதியில் வீசியுள்ளனர். அந்த குண்டு பெரிய சத்தத்துடன் வெடித்தது.
இதையடுத்து காவலர்கள் அந்த நபர்களை பிடிக்க முயன்ற நிலையில், மீண்டும் மற்றொரு பெட்ரோல் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஆளுநர் மாளிகை பிரதான நுழைவாயில் பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், தங்கள் புகாரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியது. ஆனால், ஆளுநர் மாளிகையின் புகாருக்கு நேற்று இரவே டிஜிபி சங்கர் ஜிவால் மறுப்பு அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத், வந்தது, பெட்ரோல் குண்டு வீச முயன்றது, அவரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தது ஆகிய காட்சிகள் அடங்கிய சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டனர். டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, ஆளுநர் மாளிகை புகாரில் தெரிவிக்கப்பட்டது போல் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. வந்தது ஒரே ஒரு நபர் தான். அவர் அத்துமீறி ஆளுநர் மாளிகையினுள் நுழைய முற்பட்டு ராஜ் பவன் வாயிற்காப்பாளர்களால் தடுத்து நிறுத்தப்படவும் இல்லை. அவரை வெளியிலேயே சுற்றி வளைத்து தடுத்து கைது செய்தது காவல்துறையினர் தான் எனவும், ஆளுநர் மாளிகை சொன்னதெல்லாம் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சிசிடிவி காட்சிகளையும், புகைப்படங்களையும் ஆதாரமாக வெளியிட்டு, ஆளுநர் மாளிகை கூறிய புகார்கள் முற்றிலும் பொய்யானவை என தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications