பிந்து மாதவிக்கு என்ன பிரச்சினை? நயனை பழிதீர்த்த சினிமா? அன்று அஜித்.. பின்பு ஜெய்
சென்னை: மாயன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகை பிந்து மாதவி கலந்து கொள்ளவில்லை என்பதற்காக அதே படத்தில் நடித்துள்ள சகநடிகை கொந்தளித்துப் போய் பேசி இருந்த வீடியோ பலரது கவனத்தைப் பெற்றிருந்தது.
பொதுவாக இன்றைக்குப் படத்தின் பட்ஜெட்டிற்கு செலவு செய்வதற்கு இணையாகப் படத்தை புரமோஷன் செய்வதற்காகப் பணம் செலவழிக்கப்படுகிறது. இந்த மாதிரி புரமோஷன் விசயங்களில் தனி முத்திரை பதித்தவர் தயாரிப்பாளர் தாணுதான். அவர்தான் பல கோணங்களில் யோசித்துப் படத்தை விளம்பரப்படுத்துவார். இதை அவர் என்றைக்கு சினிமா உலகிற்கு வந்தாரோ அன்று முதல் செய்து வருகிறார். இந்தக் காலத்தில் படத்தை விளம்பரப்படுத்தவில்லை என்றால் அது மக்களிடம் போய் சேர்வதில்லை. அதேநேரம் ஓவராக விளம்பரம் செய்வதால் பல எதிர்விளைவுகளையும் சந்திக்க நேர்கிறது. அதற்கு சரியான உதாரணம் சூர்யாவின் 'கங்குவா'. அதன் புரமோஷனின் போது பேசப்பட்ட விசயங்கள் படத்திற்கே ஆபத்தாக முடிந்தது.

இப்போது மற்றொரு சர்ச்சையை 'மாயன்' படத்தில் நடித்த நடிகை ஒருவர் தொடங்கி வைத்துள்ளார். படத்தின் நாயகி பிந்து மாதவி புரமோஷனில் கலந்து கொள்ளவில்லை என்பதற்காகக் கொந்தளித்து விட்டார் அவர். இந்தப் படத்தில் நடித்துள்ள ரஞ்சனா நாச்சியார் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது , "ஒரு படத்திற்குச் சம்பளம் பெறுகிறோம். அது சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுதான் தொழிலுக்கு தரும் மரியாதை. பிந்து மாதவி பெரிய நடிகை இல்லை. அவர் ஒன்றும் நயன்தாரா இல்லை. அவரை எவ்வளவு பேருக்குத் தெரியும். அதற்குள்ளாகத் தன்னைப் பெரிய நடிகையாக நினைத்துவிடக் கூடாது. பட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்றால் பிந்து மாதவியை நடிக்கக் கூப்பிடாதீர்கள். நான் குறிப்பிட்டு அவரை மட்டுமே சொல்லவில்லை.
யாராக இருந்தாலும் இது பொருந்தும். சினிமா துறை ஏற்கெனவே அழிந்து வருகிறது. அதைக் காப்பாற்ற நாம் முயல வேண்டும். படத்தில் நடித்த ஒருவரே புரமோஷனுக்கு வரவில்லை என்பது எப்படி நியாயமாகும்?" என்று கொந்தளித்துப் போய் பேசி இருந்தார். இந்த விவகாரம் பிந்து மாதவிக்கு மட்டும் அல்ல. பல நடிகை, நடிகர்களுக்குப் பொருந்தும். தொடக்கக் காலத்தில் நயன்தாரா அவரது படங்கள் சார்ந்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுத்தான் வந்தார். அவர் எப்போது பிரபுதேவாவுடன் காதல் என்ற சர்ச்சையில் சிக்கினாரோ அப்போது முதல் படப் புரமோஷன்ஸ் எதிலும் கலந்து கொள்வதைத் தவிர்க்க ஆரம்பித்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்குத் தனிப்பட்ட வகையில் பேட்டி அளிப்பதைக் கூட நிறுத்தினார்.

ஒரு கட்டத்திற்கு பின் பிரபுதேவா காதல் விவகாரம் பிரேக் அப் ஆனதும் சுத்தமாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதை தவிர்த்து படங்களில் மட்டும் நடிக்கத் தொடங்கினார். இன்றைக்கு தன் திருமண ஆவணப்படத்தில் 'நானும் ரவுடிதான்' படத்தின் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து நீதிமன்ற படிக்கட்டுவரை ஏறி இருக்கும் நயன்தாரா, அந்தப் படத்திற்கான புரமோஷன் பிரசாத் லேப்பில் நடைபெற்றபோது அதில் பங்கேற்கவே இல்லை.
இயக்குநர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, பார்த்திபன், மன்சூர் அலிகான் என்று சக நடிகர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ஆனால், இன்று அதே படம் தன் வாழ்நாளில் முக்கியமானது என்று அறிக்கை விட்டுள்ளார். இதேபோல்தான் ஒரு காலகட்டத்தில் சர்ச்சை மேல் சர்ச்சை என த்ரிஷா சிக்கினார். ஒரு சமயத்தில் த்ரிஷா என்றாலே சர்ச்சை என்ற அளவுக்கு ஊடகங்களில் செய்திகள் வந்தன. அவர் திருமணம் நின்றது, காதல் தொடர்பான சர்ச்சை என வரிசையாக எழுந்ததால், அவர் பட புரமோஷன் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்பதைத் தவிர்த்தார்.
அப்போதே நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகள் பட விழாக்களில் பங்கேற்காமல் தவிர்ப்பது குறித்து சில தயாரிப்பாளர்கள் கண்டித்துள்ளனர். இந்த மாதிரியான ஒரு ட்ரெண்ட்டை சினிமாவில் தொடங்கி வைத்தது அஜித் தான். தன் படங்களுக்கு புரமோஷன் தேவை இல்லை. படம் நன்றாக இருந்தால் அது பேசும் என விழாக்களில் பங்கேற்பதைத் தவிர்க்கும் ஒரு கலாச்சாரத்தை இவர்தான் பாதை போட்டுக் கொடுத்தார். இன்றைக்கும் ரஜினி மிகப்பெரிய ஸ்டாராக வலம் வருகிறார். அவர் விழாக்கள் மட்டும் இல்லாமல் பலரது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

ஆனால், பலர் பெரிய அளவுக்கு வெற்றி நோக்கிச் செல்வதற்கு முன்பே அந்த நிலையை தன் கற்பனையால் எட்டி விடுகின்றனர். அதற்கு உதாரணம் ஜெய். அவருடன் சேர்த்து அஞ்சலி காதல் விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அவர் தன் படங்கள் தொடர்பான விழாக்கள் மட்டும் அல்ல, ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பதைக் கூட நிறுத்திக் கொண்டார். அதேபோலவே அஞ்சலியும் பட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை நிறுத்திக் கொண்டார். கிட்டத்தட்ட அதே நிலைப்பாட்டைச் சிம்புவும் ஒரு கட்டத்தில் எடுத்தார். இது நடிகர்கள் மட்டும் சார்ந்த பிரச்சினை இல்லை. இசையமைப்பாளர் யுவன் கூட அவர் இசையமைத்த சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என புகார் எழுந்தது. ஒருவேளை வேறு விழாக்களில் பங்கேற்பதால் தவிர்க்க முடியாமல் கலந்து கொள்ளவில்லை என்பது வேறு விசயம். திட்டமிட்டே கலந்து கொள்வதில்லை என்ற கொள்கையில் இருக்கும் நடிகர், நடிகைகள் இங்கே இருக்கிறார்கள்.
தெலுங்கு, மலையாள பட உலகில் இப்படி ஒருவர் கலந்து கொள்ளவில்லை எனில் தொழில்ரீதியாக சில சிக்கல்களை எதிர்கொள்ள முடியும். இங்கே எந்த யூனியனும் வலிமையாக இல்லை என்று பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் தொடர்ந்து விழா மேடையில் ஆதங்கத்தைக் கொட்டி இருக்கிறார்கள். அந்த வரிசையில் புதியதாக நடிக்க வந்துள்ள ரஞ்சனா நாச்சியார் இப்போது பொங்கி எழுந்து பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications