இதுக்கும் திமுக தான் காரணமா? இதென்னப்பா புதுக் கதையா இருக்கு! அன்று அப்பா! இன்று மகன்!
சென்னை: அதிமுகவில் அரங்கேறி வரும் அதிரடி நிகழ்வுகளின் பின்னணியில், முதல்வர் ஸ்டாலினை அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் மையப்படுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.
முதலமைச்சர் ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் சந்தித்து பேசியதை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது ஓபிஎஸ் மகன் ஏன் அவரை தொகுதிப் பிரச்சனை சம்பந்தமாக சந்திக்கவில்லை என ஆவேசம் காட்டியிருக்கிறார்.
ஸ்டாலினை சட்டமன்றத்தில் பார்த்து சிரித்துப் பேசினார் என்பதற்காக ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து அன்று முதலமைச்சர் பதவியை சசிகலா பறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக முக்கியம்
ஆட்சியில் இருந்தாலும் சரி ஆட்சியில் இல்லாவிட்டாலும் சரி, தமிழக அரசியலின் காலச்சக்கரம் திமுகவை சுற்றியே சுழன்று வருகிறது என்பது மீண்டும் ஒருமுறை இப்போது நிரூபணமாகியுள்ளது. அதிமுகவில் எழுந்துள்ள சர்ச்சைக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றுகிறதா, ஆம் சம்பந்தம் இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியதை தான் இப்போது அதிமுகவின் முக்கியப் பிரமுகர்கள் பன்னீருக்கு எதிரான ஆயுதமாக கையில் ஏந்தியுள்ளனர்.

ஸ்டாலின் மையம்
ஸ்டாலினை சந்தித்து திமுக ஆட்சியை பாராட்டி விட்டு வர வேண்டிய அளவுக்கு ஓ.பன்னீர்செல்வம் மகனுக்கு என்ன அவசியம் வந்தது என வினவ ஆரம்பித்துள்ளார்கள் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள். எந்த ஸ்டாலினை பார்த்து சிரித்துப் பேசினார் என்பதற்காக ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டதோ, இன்று அதே ஸ்டாலினை சந்தித்து மகன் பேசியதால் அதிமுகவிலிருந்தே ஓரங்கட்டப்பட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

திமுக காரணம்?
மொத்தத்தில் திமுகவுடன் ஓ.பன்னீர்செல்வம் மென்மையான போக்கை கடைபிடித்ததே அவருக்கு இன்று எழுந்துள்ள சிக்கலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்த பலரிடமும், ரவீந்தரநாத் செய்த காரியம் சரியா நீங்களே சொல்லுங்கள் என்ற கேள்வியை வீசித்தான் இபிஎஸ் பக்கம் இழுத்து வந்திருக்கிறார்கள். இதனிடையே அதிமுக உட்கட்சி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நாகரீகமான முறையில் நடந்து கொள்வதையும் கவனிக்க வேண்டும்.

ஜெயலலிதா காலம்
ஜெயலலிதா காலத்தில் திமுக முக்கியப் பிரமுகர்களை அதிமுக முக்கியப் பிரமுகர்கள் திரும்பிக் கூட பார்க்கமாட்டார்கள். காரணம் அந்தளவுக்கு ஜெயலலிதா மீதிருந்த பயம். இது ஆரோக்கியமற்ற அரசியல் சூழலையே அப்போது காட்டியது. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் எதிரும் புதிருமாக அரசியலில் இருக்கக் கூடிய இரு துருவத்தினரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்வதை காணலாம். இது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும். தமிழகத்தில் இப்போது தான் அது போன்ற ஒரு நாகரீகமான அரசியல் சூழல் வரத் தொடங்கியுள்ளது.
Recommended Video

லாஜிக் இல்லை
இந்நிலையில் மீண்டும் அவரை ஏன் இவர் சந்திக்க வேண்டும், இவரை ஏன் அவர் சந்திக்க வேண்டும் என்ற லாஜிக் இல்லாத கேள்விகளை கோகுல இந்திரா போன்ற நபர்கள் முன் வைப்பது மீண்டும் போட்டி அரசியலுக்கே வழிவகுக்கும். எது எப்படியோ ஸ்டாலினை பார்த்து சிரித்ததற்காக அன்று முதல்வர் பதவியை பறிகொடுத்தார் ஓபிஎஸ். இப்போது ஸ்டாலினை சந்தித்து தனது மகன் பேசியதால் அதிமுகவிலிருந்தே ஓரங்கட்டப்பட்டுள்ளார் ஓபிஎஸ்.












Click it and Unblock the Notifications