உங்கள் நிலத்திற்கு வேறு ஒருவர் பட்டா வாங்கிவிட்டால் என்ன செய்யலாம்.. உடனே செய்ய வேண்டியது என்ன?
சென்னை: போலி ஆணவங்கள் மூலம் உங்கள் நிலத்தை யாராவது அபகரித்துவிட்டால் உடனே காவல்துறையில் புகார் அளித்தால் நிலத்தை மீட்க முடியும். போலீசார் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கின்றனர். சென்னையில் தற்போது போலி ஆவணம் மூலம் ரூ.84 லட்சம் நிலத்தை மோசடி செய்த தாய்- மகனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
போலியான ஆவணங்களை பயன்படுத்தி நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதை தடுக்க, பத்திரப்பதிவுக்கு முன்னதாகவே உட்பிரிவுகளை அங்கீகாரம் செய்யும் நடைமுறை தமிழகத்தில் இருக்கிறது. இந்த நடைமுறையின்கீழ் நிலங்களை விற்பவர்கள் அது சார்ந்த வட்ட அலுவலகங்களுக்கு சென்று, தான் விற்க விரும்பும் நிலம், சொத்துகளின் சான்றளிக்கப்பட்ட நகலை விண்ணப்பித்து பெற வேண்டியது அவசியம் ஆகும்.

இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டதும் வட்ட அலுவலகங்களில் உள்ள நில அளவை பணியாளர்கள் விசாரணை மேற்கொள்கிறார்கள். அதன்பின் ஒப்புதல் அளிக்கப்பட்ட உட்பிரிவு ஆவணங்கள், இணையதள வழியில் தொடர்புடைய சார் பதிவகம் மற்றும் நில உரிமையாளருக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.. அதன் பின்னரே, நில உரிமையாளர் தனது நில பரிவர்த்தனையை சார்பதிவகம் மூலம் மேற்கொள்ள முடியும் என்கிற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் போலி ஆவணங்கள் மூலம் ஒருவரின் நிலத்திற்கு இன்னொருவர் பட்டா வாங்குவது அவ்வப்போது நடந்து வருகிறது.
குறிப்பாக பழைய நிலங்களுக்கு, பழைய விடுகள் அல்லது பழைய வீட்டு மனைகளுக்கு இப்படி போலி பத்திரம் மற்றும் பட்டா வாங்குவது நடக்கிறது.. எனவே அவ்வப்போது உங்கள் நிலம் உங்கள் பெயரில் தான் இருக்கிறதா என்பதை ஆன்லைனில் செக் செய்யுங்கள். ஒருவேளை போலி ஆணவங்கள் மூலம் உங்கள் நிலத்தை யாராவது அபகரித்துவிட்டால் உடனே காவல்துறையில் புகார் அளித்தால் நிலத்தை மீட்க முடியும். போலீசார்இந்த விவாகரத்தில் நடவடிக்கை எடுத்து பலருக்கு நிலங்களை மீட்டுக் கொடுத்துள்ளனர்.
உதாரணத்திற்கு சில சம்பவங்களை பார்ப்போம். சென்னை கோடம்பாக்கம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த 55 வயதாகும் கோபிகிருஷ்ணன், இவரது தம்பி புருஷோத்தமன் (53). இவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் 10 சென்ட் நிலம் பூந்தமல்லி அடுத்த கொரட்டூர் கிராமத்தில் இருக்கிறது.
இந்த நிலத்தை புஷ்பா மற்றும் சந்திரா ஆகியோர் போலியான ஆவணம் தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார்கள் இது குறித்து கோபிகிருஷ்ணன் மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் திருவள்ளூர் அடுத்த காக்களூர் கிராமத்தை சேர்ந்த 53 வயதாகும் புஷ்பா மற்றும் அவரது மகன் டில்லி என்ற தனசேகர் (34) ஆகியோர் இந்த நில மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. தாய்- மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.84 லட்சம் என்பது தெரியவந்துள்ளது.
மற்றொரு சம்பவம்: சென்னை கிண்டி மடுவாங்கரை பகுதியை சேர்ந்த 64 வயதாகும் மொகிதீன் பாத்திமா பீவி என்பவர் அம்பத்தூர் அடுத்த கள்ளிகுப்பம் ஹாஜி நகரில் நிலம் வாங்கி போட்டிருந்தார். மொகிதீன் பாத்திமா பீவின் நிலத்தை போலி ஆவணம் மூலம் வேறு சிலருக்கு விற்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் பாத்திமா பீவி புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி விசாரணையில், செங்குன்றம் அடுத்த சோலைமா நகரை சேர்ந்த பாஜக சோழவரம் தெற்கு ஒன்றிய தலைவரான பத்மநாபன் (49) என்பவர் போலி ஆவணம் மூலம் ஆள் மாறாட்டம் செய்து அந்த இடத்தை 3 பேருக்கு விற்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பத்மநாபனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.80 லட்சம் என்பது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications