உங்கள் வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட்டால் என்ன செய்வது? உங்களால் வாக்களிக்க முடியுமா! எளிய விளக்கம்
சென்னை: நாளை வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், ஒரு வேலை நீங்கள் வாக்களிக்கும் முன்பே உங்கள் வாக்கை வேறு ஒருவர் போலியாக செலுத்தி இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனால் நேற்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. இப்போது தமிழ்நாடு முழுக்க 68,321 வாக்குச் சாவடிகள் இருக்கும் நிலையில், அங்கு இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.
லோக்சபா தேர்தல்: தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்த முறை திமுக, அதிமுக, பாஜக, நாதக எனப் பல முனை போட்டி நிலவுகிறது. இதனால் கடைசி நாளான நேற்று வரை எல்லா இடங்களிலும் மிகத் தீவிரமான பிரச்சாரம் நடைபெற்றது. இந்த முக்கிய கட்சிகளைத் தவிர, சிறிய கட்சிகள் சுயேச்சைகள் என்றும் பலரும் தேர்தலில் களமிறங்கியுள்ளன.
இந்த வேட்பாளர்களின் விவரத்தை அறிந்து நீங்கள் வாக்களிக்கலாம். இதற்காகத் தேர்தல் ஆணையத்தில் பிரத்தியேகமாக https://affidavit.eci.gov.in/ என்ற தளத்தில் சென்று வேட்பாளர் விவரத்தைத் தெரிந்து கொள்ளலாம். இதில் உங்கள் தொகுதியைத் தேர்வு செய்தால் வேட்பாளர் விவரம், அவர்களின் சொத்து விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
வாக்குச்சாவடியில் என்ன செய்ய வேண்டும்: நாளை வாக்குப்பதிவு நாளில் உங்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லுங்கள். அங்குள்ள அதிகாரி நீங்கள் எடுத்துச் சென்றிருக்கும் அடையாள அட்டையை வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் சரிபார்ப்பார். அதை அங்குள்ள பூத் ஏஜெண்டுகள் கேட்கும்படி சத்தமாக வாசித்துக் காட்டுவார். பிறகு அடுத்த அதிகாரி உங்கள் இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைப்பார். மேலும், ஒரு ஸ்லிப்பை வழங்குவார்.
பிறகு நீங்கள் படிவம் 17 ஏவில் கையெழுத்திட வேண்டும். அதைத்தொடர்ந்து அந்த ஸ்லிப்பை நீங்கள் அடுத்த அதிகாரியிடம் தர வேண்டும். அவர் தான் வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். அங்கே நாம் விரும்பும் வேட்பாளர் பெயர் அல்லது சின்னத்திற்கு அருகே உள்ள பட்டனை அழுத்த வேண்டும். அப்போது பீப் என்ற ஒலி கேட்கும். உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம்..
விவிபேட்: மேலும், அருகே இருக்கும் விவிபேட் இயந்திரத்தில் நீங்கள் வாக்களித்த நபரின் பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சாகி 7 நொடிகள் தெரியும். பீப் சத்தம் வரவில்லை என்றாலோ விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியவில்லை அல்லது வாக்களித்த நபரைத் தவிர வேறு ஒருவரின் விவரங்கள் தெரிந்தால் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க வேண்டும்.
ஏற்கனவே வாக்களித்து இருந்தால்: சரி விஷயத்திற்கு வருவோம்.. நீங்கள் வாக்களிக்க நாளை வாக்குச்சாவடிக்குச் செல்கிறீர்கள்.. ஆனால், அங்குச் சென்றவுடன் தான் உங்களுக்குத் தெரிகிறது... சர்க்கார் படத்தில் விஜய்க்கு நடப்பது போல உங்கள் வாக்கை வேறு யாரோ போலியாகப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர் என்று.. அப்போது உங்களால் வாக்களிக்க முடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
இதுபோன்ற நேரத்தில் நீங்கள் வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளிக்க வேண்டும். அவர் உங்களைப் புகாரை விசாரிப்பார். பிறகு கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) உங்களை வாக்களிக்க அனுமதிப்பார்.. நீங்கள் அதில் வாக்களிக்க வேண்டும்.. அவை தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.












Click it and Unblock the Notifications